/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காணாமல் போன வனத்துறை ஊழியரின் உடல் கண்டுபிடிப்பு
/
காணாமல் போன வனத்துறை ஊழியரின் உடல் கண்டுபிடிப்பு
ADDED : ஜூலை 04, 2025 11:17 PM

சிக்கமகளூரு: கடந்த 10 நாட்களாக மாயமாகி இருந்த வனத்துறை ஊழியர் சரத்தின் உடல், நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
குடகு மாவட்டம், மடிகேரி தாலுகாவின் காலுார் கிராமத்தை சேர்ந்த சரத், 33, வனத்துறையில் பணியாற்றினார். குடகில் பணியாற்றிய இவர், நான்கு மாதங்களுக்கு முன்பு தான், சிக்கமகளூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இவர் 10 நாட்களுக்கு முன்பு, மர்மமான முறையில் மாயமானார். கடூரின், சகராயபட்டணாவில் நீலகிரி பிளான்டேஷனில் பணியில் இருந்தவர், வீட்டுக்கும் செல்லவில்லை. கலக்கமடைந்த குடும்பத்தினர், சகராயபட்டணா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசாரும், வனத்துறையினரும் சரத்தை தேட துவங்கினர். அவரது பைக்கும், ஜெர்கின் கிடைத்தன. அதன்பின் ஒரு இடத்தில் அவரது பர்ஸ், உடைகள் கிடைத்தன. பத்து நாட்களாக தேடியும், அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
நேற்றும் நுாற்றுக்கணக்கான வனத்துறை ஊழியர்கள், போலீசார் வனப்பகுதிகளில் தேடினர். நீலகிரி பிளான்டேஷனில் இருந்து, 5 கி.மீ., தொலைவில், அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. நிர்வாணமாக இறந்து கிடந்தார். அவர் உடல் கிடைத்த இடத்தில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் மொபைல் போன் கிடந்தது.
சரத் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. அவரை சக ஊழியர்களோ அல்லது வனப்பகுதியில் திருடும் கும்பலோ கொலை செய்திருக்கலாம் என, கூறப்படுகிறது.
அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சகராயபட்டணா போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். சரத் உடல் கிடந்த இடத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.