போதைப்பொருள் வழக்கிலிருந்து பாலிவுட் நடிகர் மகன் விடுதலை
போதைப்பொருள் வழக்கிலிருந்து பாலிவுட் நடிகர் மகன் விடுதலை
ADDED : ஜூலை 18, 2026 11:03 PM

பெங்களூரு: போதைப்பொருள் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து, பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன் சித்தாந்த் கபூர் உட்பட மூன்று பேரை, கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.
பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன் சித்தாந்த் கபூர். கடந்த, 2022 ஜூன் 12ம் தேதி, பெங்களூரில் 'டிஜே' நிகழ்ச்சி நடத்த ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது, அவர் தங்கியிருந்த அறையை ஹலசூரு போலீசார் சோதனையிட்டனர்.
ஒரு குப்பை தொட்டியில், 5 கிராம் கஞ்சா, 4.86 கிராம் எம்.டி.எம்.ஏ., போதைப்பொருளை கைப்பற்றினர். இதையடுத்து, சித்தாந்த் கபூர், அகில் சோனி, ஹர்தோஷ் சிங் கைது செய்யப்பட்டனர்.
தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த சித்தாந்த் கபூர், தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு, நீதிபதி நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சித்தாந்த் கபூர் தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'மனுதாரர் உட்பட, 34 பேரின் மருத்துவ பரிசோதனை, தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்டது. அதுவும் கைதான அன்று அதிகாலை 1:45 மணி முதல், 4:45 மணி வரை, மூன்று மணி நேரத்தில் அறிக்கை தயாரிக்கப்பட்டது, போலீசாரின் கூற்று நம்பும்படியாக இல்லை' என்றார்.
இதையடுத்து நீதிபதி நாகபிரசன்னா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியதாவது:
மனுதாரருக்கு, 'சந்தோஷ் ஹெல்த் கேர்' என்ற தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தியுள்ளனர்.
இந்திய சட்டத்தின் 75வது பிரிவின் கீழ், தனியார் ஆய்வகங்களின் அறிக்கைகள், தனியார் ஆவணங்களாக தான் கருதப்படுகின்றன. இத்தகைய அறிக்கைகள் எப்போதும் சந்தேகத்துக்கு உரியவையே.
இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வைத்து ஒரு வழக்கில், 2025 ஏப்ரலில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி சந்தோஷ் மருத்துவமனையை, போதை மருந்து பரிசோதனைக்கான, அங்கீகரிக்கப்பட்ட அரசு ஆய்வகமாக எந்தவொரு அரசாணை அல்லது அறிவிப்பும் இல்லை.
எனவே, தற்போதைய தொழில்நுட்ப குறைபாடுகளை கருதி, மனுதாரர் சித்தாந்த் கபூர், அகில் சோனி, ஹர்தோஷ் சிங் ஆகியோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது. வழக்கிலிருந்து அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
