ADDED : ஜூன் 06, 2025 11:42 PM

பெங்களூரு: முதல்வரின் இல்லம், கோரமங்களாவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
பெங்களூரில் அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. தனியார், அரசு மருத்துவ, பொறியியல் கல்வி நிறுவனங்கள், பிரபலமான ஹோட்டல்கள், மருத்துவமனைகள் உட்பட பல்வேறு இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்தன.
நேற்று காலை பெங்களூரு, கோரமங்களாவின் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு, மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மின்னஞ்சலில், 'இன்று இஸ்லாமின் துல் ஹஜ் புனித நாளாகும். இந்த நாளில் அமோனியம் சல்பர் பேஸ்டு ஐ.இ.டி., வெடிகுண்டு பயன்படுத்தி, பாஸ்போர்ட் அலுவலகமும், முதல்வரின் இல்லத்தையும் தகர்ப்போம்' என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் உடனடியாக, கோரமங்களா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், அலுவலகம் முழுவதையும் சோதனை நடத்தினர். அது பொய்யான மிரட்டல் என்பது தெரிந்தது.
அதேபோன்று, முதல்வரின் காவேரி இல்லத்திலும் போலீசார் சோதனை நடத்தினர். வெடிபொருட்கள் ஏதும் தென்படவில்லை. மக்களை அச்சுறுத்தும் நோக்கில், இத்தகைய பொய்யான மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன.
மிரட்டல் வந்த மின்னஞ்சல் முகவரியை வைத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
