வாலிபர் தற்கொலையில் வெடிகுண்டு பயன்படுத்தியது அம்பலம்
வாலிபர் தற்கொலையில் வெடிகுண்டு பயன்படுத்தியது அம்பலம்
ADDED : ஜூலை 01, 2026 11:22 PM

துமகூரு: காரை வெடிக்க செய்து, வாலிபர் தற்கொலை செய்த வழக்கில், வெடிகுண்டை பயன்படுத்தியது அம்பலமாகி உள்ளது. இதில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர கன்னடாவின் அங்கோலா அகசூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரா, 30. இவரது காதலி ரம்யா, 23. கடந்த, 27ம் தேதி பெங்களூரில் இருந்து அங்கோலாவுக்கு வாடகை காரில் சென்றனர். துமகூரின் கல்லம்பெல்லா கிராமம் அருகே சென்ற போது, ரம்யாவை, நாகேந்திரா கத்தியால் குத்தினார். காரை நிறுத்திய டிரைவர் பிரவீன், ரம்யாவை காப்பாற்றினார்.
காருக்குள் இரு ந்த நாகேந்திரா, குண்டை வெடிக்க செய்து, தற்கொலை செய்து கொண்டார். நாகேந்திரா பயன்படுத்தியது நாட்டு வெடிகுண்டா அல்லது பெட்ரோல் வெடிகுண்டா என்பது தெரியாமல் இருந்தது. அதை கண்டறிய சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள், தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. கல்லம்பெல்லா போலீசாரும் விசாரணை நடத்தினர்.
உத்தர கன்னடாவின் ஹொன்னாவரில் இருந்து வெடிகுண்டுகளை நாகேந்திரா வாங்கியது தெரிந்தது. நேற்று முன்தினம் ஹொன்னாவர் சென்ற கல்லம்பெல்லா போலீசார், ஜார்ஜ் நிக்லோவ் பெர்னாண்டஸ், சந்தீப் கவுடா, நாராயண டோலுகவுடா, நாகராஜ் டோலுகவுடா ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
ஜார்ஜுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்ற, மூவரிடம் விசாரணை நடத்திய போது, நாகேந்திரா தங்களிடம் இருந்து வெடிகுண்டுகளை வாங்கி சென்றது பற்றி கூறினர்.
ஜார்ஜ் உட்பட நான்கு பேரும் ஆற்றில் மீன்பிடிக்க வெடிகுண்டை அதிகம் பயன்படுத்தி உள்ளனர். இதுபற்றி அறிந்திருந்த நாகேந்திரா, அவர்களை தொடர்பு கொண்டு மூன்று வெடிகுண்டுகளை வாங்கி சென்றதும் விசாரணையில் தெரிந்துள்ளது.
