ADDED : ஜூலை 01, 2026 11:22 PM
ஆடு திருடியவர் சிக்கினார் பங்கார்பேட்டையின் எப்பேரி கிராமத்தின் சுந்தரப்பா, 40, என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில், செம்மறி ஆடுகள் பல இருக்கின்றன. ஆடுகளை திருட, நேற்று இரவு மூன்று பேர் ஆட்டுப்பட்டியின் கதவை திறந்து உள்ளே நுழைந்தனர்.
ஆடுகளை திருட அவர்கள் முயற்சித்த போது, ஆட்டுப்பட்டியில் உறங்கிக் கொண்டிருந்த சுந்தரப்பா, எழுந்து கூச்சலிட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட சின்னகோட்டை கிராமத்தை சேர்ந்த ராகவேந்திரா, 36, என்பவரை மக்கள் பிடித்து, தர்ம அடி கொடுத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
*
விபத்தில் ஒருவர் பலி சீனிவாசப்பூரின் ஜாகீர் உசேன் மொஹல்லாவை சேர்ந்த சபீர் பாஷா, 59, நேற்று இரவு ஹோட்டலில் சாப்பாடு வாங்கி, தான் வேலை பார்க்கும் பெட்ரோல் பங்க்கு-க்கு, இரு சக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தார்.
ராம்பூர் கேட் அருகே வேகமாக வந்த கார், சபீர் பாஷாவின் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சபீர் பாஷாவை, சிகிச்சைக்காக சீனிவாசப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
*
அரிவாள் வெட்டு பங்கார்பேட்டை ரங்கப்பா பெட்ரோல் பங்க் அருகே, நேற்று இரவு, இரு சக்கர வாகனம் ஒன்றில் இருவர் அதிவேகமாக வந்தனர். அவர்களை, பங்கார்பேட்டை இந்திரா நகரைச் சேர்ந்த கோகுல், 25, என்பவர் தட்டிக் கேட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், அரிவாளை எடுத்து கோகுலை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த கோகுல், பங்கார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
