/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காதலியை மதம் மாற வற்புறுத்திய காதலன் கைது
/
காதலியை மதம் மாற வற்புறுத்திய காதலன் கைது
ADDED : அக் 25, 2025 10:56 PM

அம்ருதஹள்ளி: திருமணம் செய்ய வேண்டும் என்றால், மதம் மாற வேண்டும் என்று காதலியை வற்புறுத்திய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு, தனிசந்திராவில் வசிப்பவர் முகமது இஷாக், 27. இவரும், ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் வசிக்கும், வேறு மதத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணும் காதலித்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் 30 முதல் திருமண ஆசைக்காட்டி காதலியுடன், முகமது இஷாக் உல்லாசமாக இருந்தார்.
அதன்பின், கடந்த இரண்டு மாதங்களாக காதலியுடன் பேசுவதை, முகமது இஷாக் தவிர்த்தார். காதலி விசாரித்தபோது, முகமது இஷாக்கிற்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததும், அவருக்கும், இன்னொரு இளம்பெண்ணிற்கும் திருமண நிச்சயம் நடந்ததும் தெரிந்தது.
காதலனிடம் நியாயம் கேட்டபோது, 'நீ என் மதத்திற்கு மாற வேண்டும். அப்போது தான் உன்னை திருமணம் செய்து கொள்வேன். முதலில் நீ மதம் மாறு. பின், திருமணத்தை பற்றி பேசுவோம்' என கூறி இருக்கிறார்.
காதலி மதம் மாற மறுத்தபோது, 'உன்னை திருமணம் செய்ய மாட்டேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள்' என்று கூறி ஆபாசமாக திட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட் போலீஸ் நிலையத்தில், கடந்த 22ம் தேதி புகார் செய்தார். முகமது இஷாக் மீது வழக்குப்பதிவானது. சம்பவம் நடந்த இடம் அம்ருதஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால், அம்ருதஹள்ளிக்கு வழக்கு மாற்றப்பட்டது.
தலைமறைவாக இருந்த முகமது இஷாக் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடக்கிறது.

