'மாஜி' அமைச்சர் வைத்திலிங்கம் மீதான லஞ்ச ஊழல் வழக்கு முடித்துவைப்பு
'மாஜி' அமைச்சர் வைத்திலிங்கம் மீதான லஞ்ச ஊழல் வழக்கு முடித்துவைப்பு
ADDED : ஜூன் 10, 2026 03:07 AM
சென்னை: முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் மீதான லஞ்ச வழக்கை, முடித்து வைத்து விட்டதாக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னை, பெருங்களத்துரில், 2016ம் ஆண்டில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக, தனியார் நிறுவனம் அனுமதி கோரியது. அப்போது, அ.தி.மு.க., ஆட்சியில், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்துக்கு, 27.90 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாக, அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதன் பின், 2024ம் ஆண்டு செப்., 19ல், வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முகபிரபு ஆகியோருக்கு சொந்தமான, முத்தம்மாள் நிறுவனம் மற்றும் 11 பேர் மீது, ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஐந்து சட்டங்களின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில், வைத்திலிங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை, வழக்கை கைவிடுவதாகக் கூறி, கடந்த வாரம் வழக்கை முடித்து வைத்துள்ளதாக, அறிக்கை தாக்கல் செய்தது.
இதையடுத்து, இந்த வழக்கில் வரும் 12ம் தேதி, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அன்று லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை மீது, உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலுக்கு முன், தி.மு.க.,வில் இணைந்த வைத்திலிங்கம், தற்போது, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
