ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவை போன்ற பொறுப்பாளரை தேடும் பா.ஜ.,வினர்
ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவை போன்ற பொறுப்பாளரை தேடும் பா.ஜ.,வினர்
ADDED : ஜூன் 10, 2026 03:10 AM

- நமது நிருபர் -
காங்கிரசில் ஏற்படும் மலை போன்ற பிரச்னைகளை பனி போன்று கரைய செய்வதில், கர்நாடக காங்., பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கை தேர்ந்தவர். இவரை போன்ற பொறுப்பாளர், பா.ஜ.,வுக்கும் வேண்டும் என, இக்கட்சி தலைவர்கள் விரும்புகின்றனர்.
கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, தனித்தன்மை கொண்டவர். கட்சியில் பிரச்னை ஏற்படும் போது, அதை சரி செய்தவர். தேர்தல், தலைவர்களுக்குள் அதிருப்தி, யாராவது விவாதத்தில் சிக்குவது என எந்த பிரச்னைகள் என்றாலும், உடனடியாக மாநிலத்துக்கு வந்து, தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, பிரச்னையை தீர்த்து வைப்பார்.
ஆட்சி கவிழும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, முதல்வர் மாற்றம், அதிகார பகிர்வு விவாதத்தால் காங்கிரஸ் தத்தளித்தது. என்ன ஆனாலும், முதல்வர் பதவியை, சிவகுமாருக்கு, சித்தராமையா விட்டுத் தரமாட்டார் என, கருதப்பட்டது.
இந்த விஷயத்தால் ஆளுங்கட்சி காங்கிரசில், கோஷ்டி பூசல் அதிகரிக்கும். அப்போது அரசு தள்ளாடும் என, எதிர்க்கட்சியான பா.ஜ., எதிர்பார்த்தது.
ஆனால் இது தலைகீழாக மாறியது. சித்தராமையாவை ராஜினாமா செய்ய வைத்து, சிவகுமாரை முதல்வர் அமர்த்தி, மலைப்போன்று இருந்த பிரச்னையை, பனிப்போன்று கரைய செய்ததில், சுர்ஜாவாலாவின் பங்களிப்பு அதிகம். இவர் தனி நபரை விட, கட்சியின் நலனுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பார் என்ற கருத்து நிஜமானது.
இதற்கு முன் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு, முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையாவை மாற்றுவதில், விருப்பம் இருக்கவில்லை. முதல்வரை மாற்றினால் பிரசனைகள் வெடிக்கும் என, எதிர்பார்த்தார்.
பா.ஜ., வருத்தம் ஆனால், சுர்ஜேவாலா உறுதியாக நின்று, கட்சி கொடுத்த வாக்குறுதிப்படி நடக்க வேண்டும். மீறினால் நல்லது இல்லை என, அறிவுறுத்தினார்.
அதன்பின் ராகுல், சித்தராமையாவை ராஜினாமா செய்யும்படி உத்தரவிட்டார். பிரச்னையும் சுமுகமாக முடிந்தது. சுர்ஜேவாலாவின் செயலை பா.ஜ.,வும் பாராட்டியுள்ளது. சுர்ஜேவாலாவுடன், கர்நடக பா.ஜ., பொறுப்பாளர் ராதாமோகன்தாஸ் அகர்வாலை ஒப்பிட்டு பார்த்து வருத்தம் அடைகின்றனர்.
இவரை போன்ற பொறுப்பாளர், தங்கள் கட்சிக்கும் வேண்டும் என, விரும்புகின்றனர். ஒரு காலத்தில் பிரச்னைகளை சரி செய்வதில், பா.ஜ., முன்னணியில் இருந்தது.
காங்கிரஸ் பின் தங்கியிருந்தது. ஒழுங்கான கட்சி என்ற பெருமையுடன் பா.ஜ., நடைபோட்டது. கட்சியில் என்ன குழப்பம், பிரச்னை என்றாலும் மாநில பொறுப்பாளர் உடனடியாக கர்நாடகாவுக்கு வருவார். அனைத்தையும் சரி செய்வார்.
ஆனால் சமீப ஆண்டுகளாக, கர்நாடக பா.ஜ., வில் குழப்பங்கள் அதிகரித்துள்ளன. தொண்டர்கள் வெறுப்படைந்துள்ளனர்.
இதை சரி செய்யும்படி மேலிடத்திடமும், மாநில பொறுப்பாளர் ராதா மோகன்தாஸ் அகர்வாலிடம் மன்றாடியும் பயன் இல்லை. காங்கிரஸ் சார்பில் நடக்கும் எந்த நிகழ்ச்சிகள், கூட்டங்கள் என்றாலும் சுர்ஜேவாலா இங்கு வந்து பங்கேற்ற பின், டில்லிக்கு திரும்புகிறார்.
ஆர்வமில்லை ஆனால் பா.ஜ., பொறுப்பாளர் ராதாமோகன்தாஸ் அகர்வால், இதற்கு நேர் மாறானவர். மாநில பொறுப்பாளராக இருந்தும், கர்நாடகாவுக்கு வருவதில்லை. இதற்கு முன் மாநில பொறுப்பாளராக இருந்த அருண் சிங், எப்போதாவது, கர்நாடகாவில் தலை காட்டுவார். கட்சியின் பிரச்னைகளை தீர்த்து வைப்பதில், ஆர்வம் காட்டியது இல்லை.
இன்றைய பொறுப்பாளர் ராதா மோகன்தாஸ் அகர்வாலும், இதற்கு விதிவிலக்கு அல்ல. காங்கிரஸ் பொறுப்பாளர் சுர்ஜேவாலாவை போன்று, திறமையான பொறுப்பாளர் நமக்கும் வேண்டும் என, மாநில பா.ஜ., தலைவர்கள் குரல் கொடுக்க துவங்கியுள்ளனர்.
பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:
மாநில பா.ஜ., பொறுப்பாளர் ராதா மோகன்தாஸ் அகர்வால், கட்சியின் பிரச்னைகளை சரி செய்வதில், ஆர்வம் காட்டவில்லை. டில்லியில் இருந்து கட்சி மேலிடம் பிறப்பிக்கும் உத்தரவுகளை, கர்நாடகா தலைவர்களிடம் தெரிவிக்கும் 'போஸ்ட் மேன்' போன்று இருக்கிறாரே தவிர, கட்சியின் குழப்பங்களை கண்டு கொள்வது இல்லை.
விரைவில் ஜி.பி.ஏ., தேர்தல், உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில், சட்டசபை தேர்தல் வரும். இந்த தேர்தலுக்கு, ஆளுங்கட்சி காங்கிரஸ் இப்போதிருந்தே தயாராகிறது. ஆனால் எங்கள் கட்சி எதுவும் செய்யாமல், காலம் கடத்துகிறது. தேர்தல் வரும்போது, பார்த்து கொள்ளலாம் என, மெத்தனமாக உள்ளது. நாங்கள் காங்கிரசார் என்ன செய்கின்றனர் என, பார்த்து அதையே செய்ய வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
