ADDED : ஜூன் 10, 2026 03:11 AM

பெங்களூரு: காங்கிரஸ், பா.ஜ., முன்னாள் முதல்வர்கள் வீடுகளுக்கு, இன்னாள் முதல்வர் சிவகுமார் சென்று வாழ்த்து பெற்றார். அவர்கள், ஆரத்தி எடுத்து வரவேற்றதை கண்டு மெய்சிலிர்த்தார்.
கர்நாடக முதல்வராக சிவகுமார் கடந்த 3ம் தேதி பதவியேற்று கொண்டார். அன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர்களான, ம.ஜ.த.,வின் முன்னாள் பிரதமர் தேவகவுடா, பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீடுகளுக்கு நேரில் சென்று வாழ்த்து பெற்றார். இது அரசியலில் முன்னுதாரணமாக இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காங்கிரஸ் முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி, பா.ஜ.,வின் முன்னாள் முதல்வர்கள் சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் வீடுகளுக்கும் சென்று அவர்களிடம் சிவகுமார் வாழ்த்து பெற்றார்.
சதானந்த கவுடா வீட்டிற்கு சிவகுமார் சென்ற போது, அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதனை கண்டு சிவகுமார் மெய்சிலிர்த்து போனார்.
சதானந்த கவுடாவின் பேத்தி, பேரன், பேப்பரில் சிறிய வீடு போன்று வரைந்து, முதல்வர் சிவகுமாரை எங்கள் வீட்டிற்கு வரவேற்கிறோம் என்று எழுதி இருந்தனர்.
அதை சிவகுமாரிடம் கொடுத்தனர். மகிழ்ச்சியில் திளைத்த அவர் பாராட்டினார். நன்றாக படிக்க வேண்டும் என்று கூறி ஆசி வழங்கினார். மூன்று முன்னாள் முதல்வர்களிடமும் ஆட்சியை சுமுகமாக நடத்துவது பற்றியும், மக்கள் நல திட்டங்கள் பற்றியும் சிவகுமார் ஆலோசனை நடத்தினார்.
