பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்: மாரிகுப்பம் பயணியர் பரிதவிப்பு
பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்: மாரிகுப்பம் பயணியர் பரிதவிப்பு
ADDED : ஜூலை 16, 2026 11:58 PM
தங்கவயல்: கே.எஸ்.ஆர்., பெங்களூரு சிட்டியில் இருந்து புறப்பட்டு சென்னை செல்லும் பிருந்தாவன் விரைவு ரயில், நேற்று பங்கார்பேட்டை ரயில் நிலையத்துக்கு, 20 நிமிடம் தாமதமாக வந்தது. இதனால், மாரிகுப்பம் செல்லும் இணைப்பு ரயில் புறப்பட்டு சென்று விட்டதால், ஏராளமான பயணியர் அவதிக்குள்ளாகினர்.
தங்கவயலில் இருந்து பல்வேறு வேலைகளுக்காக பெங்களூருக்கு பல்வேறு ரயில்களில் தினமும் ஏராளமானோர் பயணிக்கின்றனர்.
குறிப்பாக, ஹெச்.ஏ.எல்., பெமல், பல்வேறு மருத்துவமனைகள், தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர், காலை 7:00 மணி முதல் 3:00 மணி வரையிலான வேலையை முடித்து, பிருந்தாவன் விரைவு ரயில் மூலம் பங்கார்பேட்டை வந்து அங்கிருந்து, இணைப்பு ரயில் மூலம் தங்கவயலுக்கு வருகின்றனர்.
வழக்கமாக, கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து நேற்று பகல் 3:15 மணிக்கு பிருந்தாவன் ரயில் புறப்பட்டது. இந்த ரயில், பங்கார்பேட்டைக்கு மாலை 4:20 மணிக்கு வரும். இங்கு இறங்கும் பயணியர், ஒயிட்பீல்டு ரயில் நிலையத்தில் இருந்து வரும் மெமு ரயிலில் ஏறி, தங்கவயல் மாரிகுப்பம் செல்வர்.
ஆனால், நேற்று ஒயிட்பீல்டில் இருந்து இணைப்பு ரயில், மாலை 4.27 மணிக்கு வந்தது. பிருந்தாவன் ரயில் வராதால், இணைப்பு ரயில் மாரிகுப்பத்துக்கு புறப்பட்டு சென்று விட்டது.
பிருந்தாவன் ரயில் மாலை 4.46 மணிக்கு வந்தது. இதில் பயணித்த தங்கவயல் பயணியர், மாரிகுப்பம் ரயில் இல்லாததால் பங்கார்பேட்டை பஸ் நிலையம் சென்றனர்.
அங்கு பயணியர் கூட்டம் அலைமோதியது. பலர் ஷேர் ஆட்டோக்களில் பயணித்து மாரிகுப்பத்துக்கு சென்றனர்.
போதிய பஸ் வசதி இல்லாமல், அவதிப்படுவது இப்படி ஓரிரு நாளல்ல; அடிக்கடி அவதிப்படுகின்றனர். பங்கார்பேட்டை முதல் மாரிகுப்பம் வரை செல்ல நேரடி பஸ் வசதியே கிடையாது .
தங்கவயலில் வேலைவாய்ப்புக்கு தான் வழியில்லை என்றால், பெங்களூரு சென்று வர போக்குவரத்து வசதிக்கு அவதிப்பட வேண்டியுள்ளதாக பயணியர் குமுறுகின்றனர்.
