ADDED : மே 17, 2026 11:27 PM

ராய்ச்சூர்: தாயை மோசமான வார்த்தைகளால் திட்டிய அண்ணனை, அவர் துாங்கும் போது, தலையணையால் அமுக்கி கொன்ற தம்பி கைது செய்யப்பட்டார்.
ராய்ச்சூர் எஸ்.பி., அருணான்சு கிரி நேற்று அளித்த பேட்டி:
ராய்ச்சூர் மாவட்டம், லிங்கசகூர் டவுனின் பசவேஸ்வரா கிராசில் வசித்தவர் பசவராஜ், 37; இவரது தம்பி ஸ்ரீதர். பசவராஜ் தினமும் குடித்து விட்டு இரவு வீட்டுக்கு வருவது வழக்கம்.
நேற்று முன்தினம் வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்த பசவராஜ், தனது தாயாரை மோசமான வார்த்தைகளால் திட்டி விட்டு, உறங்க சென்று விட்டார்.
இதனால் கோபத்தில் இருந்த தம்பி ஸ்ரீதர், அண்ணன் உறங்கியதும், அவரின் முகத்தில் தலையணையை வைத்து, மூச்சு திணறடித்து கொலை செய்துள்ளார். பின், இயற்கையாக மரணம் அடைந்தது போன்று சித்தரித்துள்ளார்.
தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று பசவராஜ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அறிக்கையில், மூச்சு திணறடித்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக ஸ்ரீதரிடம் விசாரித்த போது, உண்மையை ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்து விசாரிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
