/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சுரங்க தொழிலுக்கு சாலை அமைக்க எதிர்ப்பு கிராமத்தினர் மீது தொழிலதிபர் துப்பாக்கிச்சூடு
/
சுரங்க தொழிலுக்கு சாலை அமைக்க எதிர்ப்பு கிராமத்தினர் மீது தொழிலதிபர் துப்பாக்கிச்சூடு
சுரங்க தொழிலுக்கு சாலை அமைக்க எதிர்ப்பு கிராமத்தினர் மீது தொழிலதிபர் துப்பாக்கிச்சூடு
சுரங்க தொழிலுக்கு சாலை அமைக்க எதிர்ப்பு கிராமத்தினர் மீது தொழிலதிபர் துப்பாக்கிச்சூடு
ADDED : ஏப் 24, 2025 07:22 AM

சிக்கபல்லாபூர்: சுரங்கத் தொழிலுக்கு பாதை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கிராமத்தினர் மீது, தொழிலதிபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
சிக்கபல்லாபூர் மாவட்டம், மான்சேனஹள்ளியில் உள்ள மலையில் சுரங்கத்தொழில் துவங்க தொழிலதிபர் சக்லேஷ் திட்டமிட்டிருந்தார். இதற்கான பணிகளையும் செய்து வந்தார்.
இதையறிந்த கிராம மக்கள், தங்கள் கிராமத்தில் உள்ள மலையில் சுரங்கத் தொழில் செய்ய எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மேலும், மாச்சேனஹள்ளி தாலுகாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கமிட்டியில், விவசாயிகள் சங்கத்தினர் போராட்டமும் நடத்தினர்.
இந்நிலையில், நேற்று காலை தொழிலதிபர் சக்லேஷ், அவரது ஆதரவாளர்களுடன் பொக்லைன் மூலம் சுரங்கத் தொழில் செய்யும் இடம் வரை சாலை அமைக்க முடிவு செய்தார்.
இதை அறிந்த கிராமத்தினர், சாலை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால் அவருக்கும், கிராமத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி, இரு தரப்பினர் இடையே கைகலப்பானது. இதில், சக்லேஷின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
கோபமடைந்த அவர், ஒரு கையால் தலையை பிடித்துக் கொண்டு, காரில் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்து, 'யார் என்னை அடித்தது?' என்று கத்தினார். இதை பார்த்த கிராமத்தினர், 'நாங்கள் அடிக்கவில்லை' என்று கூறி, அவர் அருகில் வர முயற்சித்தனர்.
அப்போது சக்லேஷ் சுட்டதில், கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரின் இடது தொடையில் குண்டு பாய்ந்து கீழே விழுந்தார்.
இதனால் பதற்றமான சூழ்நிலை உருவானது. படுகாயம் அடைந்த ரவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தகவல் அறிந்த மான்சேனஹள்ளி, கவுரிபிதனுார் போலீசார் அங்கு வந்து, சக்லேஷை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவரின் தலையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளித்தனர்.
பின் அவரை கைது செய்து, மான்சேனஹள்ளி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தகவல் அறிந்த எஸ்.பி., குஷால், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
சக்லேஷ் துப்பாக்கிச்சூடு நடத்தியதை கண்டித்து, போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
அவர்களுடன், எஸ்.பி., பேச்சு நடத்தினார். “சக்லேஷ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என, உறுதி அளித்தார். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

