அமைச்சரவை விரிவாக்கம் தாமதம் மழைக்கால தொடர் தள்ளிவைப்பு?
அமைச்சரவை விரிவாக்கம் தாமதம் மழைக்கால தொடர் தள்ளிவைப்பு?
ADDED : ஜூலை 23, 2026 11:07 PM
பெங்களூரு: அமைச்சரவை விரிவாக்கம் தாமதமாவதால், ஆகஸ்ட் 6ம் தேதியன்று நடக்கலாம் என, எதிர்பார்க்கப்பட்ட மழைக்கால கூட்டத்தொடர் தள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளது.
முதல்வர் சிவகுமார் தலைமையிலான கர்நாடக அரசு, ஜூலை 24ம் தேதிக்குள், அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருந்தது.
எனவே, ஆகஸ்ட் 6ம் தேதி, முதல் சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரை துவக்க ஆலோசித்தது.
இது தொடர்பாக, கவர்னருக்கு தகவலும் அனுப்பியது. ஆனால் இன்னும் கூட்டத்தொடர் தேதியை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
அமைச்சரவை விரிவாக்கத்துக்கு, காங்கிரஸ் மேலிடம் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. எனவே கூட்டத்தொடர் கூடுவது தள்ளிப்போகும் என, கூறப்படுகிறது.
பொதுவாக சட்டசபை கூட்டம் குறித்து, நிர்ணயித்த நாட்களுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை.
இரண்டு, மூன்று நாட்களுக்கு முன் கூட, அவசர கூட்டத்தொடர் என்ற பெயரில், சட்டசபை கூட்டத்தொடர் நடத்திய உதாரணங்கள் உள்ளன.
கேள்வி கேட்க எம்.எல்.ஏ.,க்களுக்கும், கேள்விகளை பரிசீலித்து அந்தந்த துறைகளுக்கு அனுப்ப, சபாநாயகர் அலுவலக ஊழியர்களுக்கும், கேள்விகளுக்கு பதில் அளிக்க அமைச்சர்கள், துறை அதிகாரிகளுக்கு, கால அவகாசம் தேவைப்படும்.
இதே காரணத்தால், கூட்டத்தொடர் துவங்கும், 15 நாட்களுக்கு முன்பே, தேதி அறிவிக்கப்படுவது வழக்கம்.
அமைச்சரவை இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. புதிதாக அமைச்சராகுவோர், அலுவலக பூஜை செய்ய, துறைகளின் முன்னேற்ற பரிசீலனை கூட்டம் நடத்த, கால அவகாசம் வேண்டும். கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக நேரம் தேவைப்படும். அமைச்சர்கள் இல்லாமல், சட்டசபையை நடத்துவது கஷ்டம். 34 அமைச்சர்களில், 13 அமைச்சர்கள் மட்டுமே உள்ளனர். மற்ற இடங்கள் காலியாக உள்ளன.
பெரும்பாலான துறைகள், முதல்வரிடமே உள்ளன. துறைகளுக்கு தனி அமைச்சர்கள் இல்லை. வறட்சி நிலவுவதால், விவசாயம், தோட்டக்கலைத்துறை கேள்விகளுக்கு அதிகமாக இருக்கும். ஆனால், இந்த துறைகளுக்கு அமைச்சர்களே இல்லை. இதை கருதி, சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
