ADDED : ஏப் 11, 2026 04:09 AM

- நமது நிருபர் -: மாலை நேரத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைப்பர். அதுவும், டீ குடிக்கும் போது, 'நொறுக்கு' தின்பண்டம் சாப்பிடுவதில் அலாதி பிரியம் இருக்கும். அவர்களுக்காகவே இந்த வாரம் மாலை நேரத்தில், மொறு மொறு கேரட் சிப்ஸ் செய்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்
* கேரட் - 4
* மிளகாய் துாள் - 1 டீஸ்பூன்
* மிளகு துாள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் துாள் - 1 டீஸ்பூன்
* சோள மாவு - அரை டீஸ்பூன்
* கடலை மாவு - அரை டீஸ்பூன்
* அரிசி மாவு - அரை டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கு ஏற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு
* இஞ்சி பூண்டு விழுது - தேவையான அளவு
செய்முறை
* குழந்தைகள் விரும்பும் சிப்ஸ் செய்வதற்கு முதலில் கேரட்டை நீளம் அல்லது வட்ட வடிவில் என உங்களுக்குப் பிடித்தவாறு கேரட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
* நறுக்கிய கேரட்டுடன் ஒரு டீஸ்பூன் மிளகு துாள், ஒரு டீஸ்பூன் சீரகத்துாள், சிறிதளவு உப்பு, சோள மாவு, அரிசி மாவு, கடலை மாவு போன்றவற்றைச் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பிசைந்து, 10 நிமிடம் ஊற வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிப்ஸ்க்காக பிசைந்து வைத்துள்ள கேரட் கலவையை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுத்தால், சுவையான மற்றும் மொறு மொறு கேரட் சிப்ஸ் தயார்.
ஊட்டச்சத்துக்கள் உள்ளன
கேரட்டில் உள்ள முக்கியமான சுத்து 'வைட்டமின் ஏ'. இது கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மாலைக்கண் நோயை தடுக்கவும் உதவுகிறது. 'வைட்டமின் கே1' எலும்பு ஆரோக்கியம், ரத்த உறைதலுக்கு இன்றியமையாதது.
'வைட்டமின் பி6' உடலின் வளர்ச்சி, வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இதில் உள்ள பொட்டாசியம் உதவுகிறது. நார்சத்து உள்ளதால் செரிமானத்துக்கு நல்லது.

