வந்தே மாதரம் பாடலில் 'கட்' அரசுக்கு எதிராக வழக்கு
வந்தே மாதரம் பாடலில் 'கட்' அரசுக்கு எதிராக வழக்கு
ADDED : செப் 16, 2026 12:15 AM
பெங்களூரு: அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலில் முதலில் இரண்டு பத்திகள் மட்டுமே பாடப்படும் என்ற மாநில அரசின் உத்தரவுக்கு எதிராக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
வந்தே மாதரம் பாடலை அவமதிப்பு செய்பவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் திருத்த மசோதா பார்லிமென்ட்டில் கடந்த ஆகஸ்ட்டில் நிறைவேற்றப்பட்டது. திருத்த மசோதாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அது சட்டமானது.
இந்நிலையில், 'பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தவிர, மற்ற அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளை மட்டும் பாடினால் போதும்' என காங்கிரஸ் அரசு கடந்த 8ம் தேதி அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் கிரிஷ் பரத்வாஜ், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்து, மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இம்மனு இன்று விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் கடந்த ஜூலை மாதம் அனுப்பிய சுற்றறிக்கையில், வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட வேண்டும் என தெளிவாக கூறியுள்ளது. ஆனால், மாநில அரசோ மத்திய அரசின் உத்தரவுக்கு முரணமாக செயல்படுகிறது.
தேசிய சின்னங்கள், தேசிய பாடல் தொடர்பான சட்டங்களை இயற்றும் முழு அதிகாரம் பார்லிமென்ட்டுக்கு மட்டுமே உண்டு. மாநில அரசு தலையிட அதிகாரம் இல்லை. லோக்சபாவில் இயற்றப்பட்ட திருத்த மசோதாவை மாநில அரசு மதிக்கவில்லை.
மாநில அரசின் உத்தரவு அடிப்படை பேச்சு, கருத்து சுதந்திரத்தை முடக்குகிறது. முறையான சட்ட ஆலோசனைகள் இன்றி அவசரமாக முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. எனவே, மாநில அரசின் உத்தரவை திரும்ப பெறவும், வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
