அடுக்குமாடி குடியிருப்பு சங்க பணத்தை கையாடல் செய்த 18 பேர் மீது வழக்கு
அடுக்குமாடி குடியிருப்பு சங்க பணத்தை கையாடல் செய்த 18 பேர் மீது வழக்கு
ADDED : மார் 21, 2026 05:40 AM
பாகல்குண்டே: அடுக்குமாடி குடியிருப்போர் சங்க பணத்தை கையாடல் செய்ததாக, சங்கத்தின் தலைவர் உட்பட, 18 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
பெங்களூரு பாகல்குண்டே ஷெட்டிஹள்ளியில், பிரின்ஸ் டவுன் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்வது, கலாசார நிகழ்ச்சிகள் நடத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.
குடியிருப்பில் மொத்தம், 700 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு வீட்டில் இருந்து, 60,000 ரூபாய் வசூலித்து உள்ளனர்.
இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வக்கீல் நிஷா, பாகல்குண்டே போலீஸ் நிலையத்தில் கடந்த, 18ம் தேதி அளித்த புகாரில், 'அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போரிடம் இருந்து வசூலிக்கும் பணத்தில், முறைகேடு நடந்து உள்ளது.
'கடந்த இரண்டு ஆண்டுகளில், 1.73 கோடி ரூபாய் மோசடி நடந்து உள்ளது. ஆண்டிற்கு ஆண்டு தணிக்கை செலவுகள் மாறுவது சந்தேகமாக உள்ளது.
'சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள், பணத்தை தங்கள் மனைவியர், வீட்டு வேலைக்காரர்கள் வங்கி கணக்கிற்கு மாற்றி உள்ளனர். இதுகுறித்து விசாரிக்க வேண்டும்' என, கூறியிருந்தார்.
இந்த புகாரின்படி, சங்கத்தின் தலைவர் அருண், செயலர் அலெக்ஸ், பொருளாளர் பிரவீன் நாயக் உட்பட 18 பேர் மீது பாகல்குண்டே போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவக்கி உள்ளனர்.
விசாரணைக்கு ஆஜராக, 18 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உள்ளனர்.
