மோதலை துாண்டும் வகையில் பேசியதாக பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., மீது வழக்கு
மோதலை துாண்டும் வகையில் பேசியதாக பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., மீது வழக்கு
ADDED : ஜூன் 04, 2026 11:06 PM

கலபுரகி: இரு சமூகங்களுக்கு இடையே, மோதலை துாண்டும் வகையில் பேசியதாக, பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., தத்தாத்ரேயா பாட்டீல் ரேவூர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது .
கலபுரகியின் ஆலந்த் தர்காவில் சிவலிங்கத்தை வழிபட சென்ற ஹிந்துக்கள் மீது கல் வீசிய வழக்கில், கைதானவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற, கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் இரண்டு வாரத்திற்கு முன் முடிவு செய்யப்பட்டது.
இதை கண்டித்து, கலபுரகியில் நேற்று முன்தினம், பா.ஜ., சார்பில் போராட்டம் நடந்தது. கலபுரகி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., தத்தாத்ரேயா பாட்டீல் ரேவூர் பேசுகையில், 'முன்னாள் அமைச்சர் கமருல் இஸ்லாம், கலபுரகியை மினி பாகிஸ்தானாக மாற்ற போவதாக கூறினார். இதனால் தான் அவர் தேர்தலில் தோல்வி அடைந்தார்' என்று பேசி இருந்தார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் அஸ்கர் என்பவர், ஸ்டேஷன் பஜார் போலீசில் புகார் செய்தார். தனது புகாரில் இரு சமூகங்களுக்கு இடையில் பிரச்னையை துாண்டி விட பார்க்கிறார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
அந்த புகாரின்படி, தத்தாத்ரேயா பாட்டீல் ரேவூர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
