/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பச்சிளம் குழந்தை இறப்பு பெற்றோர் மீது வழக்கு
/
பச்சிளம் குழந்தை இறப்பு பெற்றோர் மீது வழக்கு
ADDED : பிப் 01, 2026 05:01 AM
துமகூரு: சரியான பராமரிப்பு இல்லாததால், பச்சிளம் பெண் குழந்தை உயிரிழந்தது. இதற்கு காரணமான தாய், தந்தை உட்பட, நால்வர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
துமகூரு நகரில் தம்பதி வசிக்கின்றனர். கணவருக்கு 45 வயது, மனைவிக்கு, 40 வயதாகிறது. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு மகள்கள் உள்ளனர். திருமண வயதில் மூத்த மகள் இருக்கும் நிலையில், மனைவி மீண்டும் கர்ப்பமடைந்தார். ஜனவரி, 28ம் தேதி, அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மறுநாள் அவரது மூத்த மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில், தாயும் பங்கேற்க வேண்டி இருந்ததால், குழந்தையை தன் தங்கை வீட்டில் விட்டு விட்டு, மகளின் நிச்சயத்துக்கு சென்று விட்டார். சித்தி வீட்டில் இருந்த குழந்தை, சரியான பராமரிப்பு இல்லாமல் உடல் ஆரோக்கியம் பாதிப்படைந்தது. உடல் நிலை மோசமானதால், சித்தி வீட்டினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன் தினம் குழந்தை உயிரிழந்தது.
பச்சிளம் குழந்தையின் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டதால், மருத்துவமனை ஊழியர்கள், குழந்தைகள் பாதுகாப்பு துறைக்கும், துமகூரு மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று குழந்தையை பார்வையிட்டனர். பெற்றோர் உட்பட நால்வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெற்றோரின் அலட்சியமே, குழந்தையின் இறப்புக்கு காரணம் என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்துகின்றனர்.

