ஹிந்தி பெயர் பலகையை சேதப்படுத்தியோர் மீது வழக்கு
ஹிந்தி பெயர் பலகையை சேதப்படுத்தியோர் மீது வழக்கு
ADDED : ஜூலை 01, 2026 11:26 PM

ஜாலஹள்ளி: ஹிந்தியில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை அடித்து நொறுக்கிய கன்னட அமைப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெங்களூரு பி.இ.எல்., சதுக்கத்தில் ஹிந்தி எழுத்துகளுடன் கூடிய பெயர் பலகை சமீபத்தில் வைக்கப்பட்டது. ஹிந்தி மொழியில் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்ததால், கர்நாடக ரக் ஷன வேதிகே அமைப்பினர், 10க்கும் மேற்பட்டோர், அந்த பெயர் பலகையை நேற்று முன்தினம் அடித்து உடைத்தனர். இது, வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இது குறித்து, கர்நாடக ரக் ஷன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கவுடா கூறியதாவது:
மத்திய அரசுக்கு சொந்தமான பி.இ.எல்., எனும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியில் கன்னடர்களின் பங்கு இன்றியமையாதது. அப்படி இருக்கையில், பி.இ.எல்., நிறுவனம் பொது சாலையில் ஹிந்தியில் பெயர் பலகையை வைத்தது கண்டனத்திற்குரியது.
கர்நாடகாவில் ஹிந்தி திணிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம். எந்த வடிவில் ஹிந்தி திணிக்கப்பட்டாலும் விரட்டியடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், பொது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக கன்னட அமைப்பினர் மீது ஜாலஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளதாக நேற்று தெரிவித்தனர். இவ்விஷயத்தில் விரிவான விசாரணை நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
