எஸ்.ஐ.ஆர்., பணிகளில் காங்., தலையீடு எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றச்சாட்டு
எஸ்.ஐ.ஆர்., பணிகளில் காங்., தலையீடு எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 01, 2026 11:27 PM

பெங்களூரு: ''எஸ்.ஐ.ஆர்., பணிகளை சரியாக நடக்கவிடாமல், காங்கிரஸ் அரசு இடையூறு செய்கிறது,'' என, எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
எஸ்.ஐ.ஆர்., பணிகள் நேற்று (நேற்று முன்தினம்) முதல் நமது மாநிலத்தில் துவங்கியுள்ளது.
ஆனால், போதிய அளவில் ஓட்டுச்சாவடி நிலை அதிகாரிகளை அரசு நியமிக்கவில்லை. பணிகளை சரியாக நடக்கவிடாமல் காங்கிரஸ் அரசு இடையூறு செய்கிறது.
அரசு அதிகாரிகள், ஊழியர்களை மட்டுமே ஓட்டுச்சாவடி நிலை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் ஜெயநகர் உட்பட 20 இடங்களில் அரசு சாரா நபர்கள், காங்கிரஸ் நிர்வாகிகளை சட்டவிரோதமாக நியமித்து உள்ளனர்.
சாம்ராஜ்பேட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜமீர் அகமது கான் புகைப்படத்தை காட்டி, எஸ்.ஐ.ஆர்., பணியை நடத்தி உள்ளனர். எஸ்.ஐ.ஆர்., பணிகளில் ஈடுபடுவோருக்கு பயணம், தினசரி படியை அரசு வழங்கவில்லை.
பெங்களூரு எம்.எல்.ஏ.,க்களுக்கு நிதி ஒதுக்குவதில் அரசு பாரபட்சம் காட்டுகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளுக்கு தலா 100 கோடி ரூபாய் வழங்குகின்றனர்.
எங்கள் எம்.எல்.ஏ.,க்களுக்கு வெறும் 40 லட்சம் ரூபாய் முதல், 50 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுக்கின்றனர்.
நாங்கள் ஆட்சியில் இருந்த போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிக்கும் அதிக நிதி ஒதுக்கினோம். பெங்களூரில் சரியாக வளர்ச்சி பணிகள் செய்தால், லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோற்று இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
