பெண்ணை மிரட்டி பலாத்காரம் ஜோதிடர் மீது வழக்கு பதிவு
பெண்ணை மிரட்டி பலாத்காரம் ஜோதிடர் மீது வழக்கு பதிவு
ADDED : மே 03, 2026 11:27 PM

சி.கே.அச்சுக்கட்டு: கணவரும், பிள்ளைகளும் ரத்தம் கக்கி சாவர் என்று, பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த, ஜோதிடர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
பெங்களூரு சி.கே.அச்சுக்கட்டு பகுதியில் வசிக்கும், 40 வயது பெண், ராஜாஜி நகரில் அழகு நிலைய பயிற்சி நிறுவனம் நடத்துகிறார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பயிற்சி நிறுவனத்திற்கு, சி.கே.அச்சுக்கட்டுவில் வசிக்கும் மோகன் குமார், 37, என்பவர் சென்றார். தனது தங்கையை பயிற்சி நிறுவனத்தில் சேர்க்க வேண்டும் என்றும், தன்னை ஜோதிடர் என்றும் கூறி கொண்டார்.
இதை நம்பிய பெண், மோகன் குமாரின் மொபைல் போன் நம்பரை வாங்கினார். இருவரும் அடிக்கடி பேசினர். உங்கள் பயிற்சி நிறுவனம் வளர்ச்சி அடைய, சிறப்பு பரிகாரங்கள் செய்ய வேண்டி உள்ளது என்று பெண்ணிடம், மோகன் குமார் கூறினார். அதன்படி நிறுவனத்தில் பரிகார பூஜை நடந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பெண்ணிடம் மீண்டும் பேசிய மோகன் குமார், உங்களது தாம்பத்ய வாழ்க்கைக்கு பாதிப்பு வர உள்ளது; மைசூரு சென்று சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசிக்க வேண்டும் என்றார். பின், மோகன் குமாரும், பெண்ணும் காரில் மைசூரு சென்றனர்.
கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்திய மோகன் குமார், பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார். அவர் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்.
சில நாட்களில் மீண்டும் பெண் வீட்டிற்கு சென்ற மோகன் குமார், பெண்ணின் கணவர், இரண்டு பிள்ளைகளை வெளியே அனுப்பி விட்டு, வீட்டில் சிறப்பு பூஜை செய்வதாக கூறினார். பெண்ணின் கை, கால்களை கட்டி போட்டு பலாத்காரம் செய்தார். இதுபற்றி வெளியே கூறினால் உனது கணவர், பிள்ளைகள் ரத்த வாந்தி எடுத்து சாவது போல, மாந்தீரிகம் செய்வேன் என்று மிரட்டி உள்ளார். பயந்து போன பெண் யாரிடமும் சொல்லவில்லை.
இதை சாதகமாக பயன்படுத்திய மோகன் குமார், மேலும் சில முறை பெண்ணை பலாத்காரம் செய்து உள்ளார். தொடர்ந்து மிரட்டியதால் வேறு வழியின்றி பெண், தனது கணவர், உறவினர்களிடம் கூறினார்.
மோகன் குமார் மீது சி.கே.அச்சுக்கட்டு போலீஸ் நிலையத்தில் 1 ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மோகன் குமாரை தேடிவருகின்றனர்.
