ADDED : ஜூலை 16, 2026 11:52 PM

பெங்களூரு: கோழி தீவனம் விலை உயர்ந்தது, வெளி மாநிலங்களுக்கு அனுப்புவது உட்பட, பல்வேறு காரணங்களால் பெங்களூரில் கோழி மற்றும் கோழி முட்டை விலை, தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.
பெங்களூரில் கடந்த சில நாட்களாக, கோழி மற்றும் கோழி இறைச்சி விலை தொடர்ந்து உயர்கிறது. முட்டை விலையும் கூட தொடர்ந்து அதிகரிக்கிறது. இதற்கு முன், மொத்த விலையில் ஒரு முட்டையின் விலை, 6.30 ரூபாயாக இருந்தது. இப்போது 7.15 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சில்லரை விலையில் எட்டு ரூபாயாக இருந்தது, இப்போது, 9 ரூபாயாக விற்கப்படுகிறது.
ஆஷாடா மாதத்திலும் முட்டை, கோழி இறைச்சி தேவை குறையவில்லை. கோழி தீவனம் விலை அதிகரித்துள்ளது. மார்க்கெட்டுகளுக்கு கோழி வரத்து குறைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து, வெளி மாநிலங்களுக்கு கோழிகள், கோழி முட்டைகள் அனுப்பப்படுவதே, விலை உயர்வுக்கு காரணம்.
இப்போதைக்கு விலை குறைய வாய்ப்பு இல்லை என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
