முதல்வர் நெருக்கடியால் ராஜினாமா பசவராஜ் ஹொரட்டி குற்றச்சாட்டு
முதல்வர் நெருக்கடியால் ராஜினாமா பசவராஜ் ஹொரட்டி குற்றச்சாட்டு
ADDED : ஆக 12, 2026 12:05 AM

ஹூப்பள்ளி: ''நான் உடல் நலம் பாதிப்படைந்து, மருத்துவமனையில் இருந்த போதும், ராஜினாமா செய்யும்படி, முதல்வர் எனக்கு நெருக்கடி கொடுத்தார்,'' என, மேல்சபையின் முன்னாள் தலைவர் பசவராஜ் ஹொரட்டி குற்றம்சாட்டினார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நா,ன் உடல் நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் இருந்த போது, எனக்கு போன் செய்த முதல்வர் சிவகுமார், மேல்சபை தலைவர் பதவியை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தினார்.
இது குறித்து, பேச்சு நடத்திய பின், ஆகஸ்ட் 14ம் தேதி ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தேன். ஆனால் எனக்கு முதல்வர் தொடர்ந்து அதிகப்படியான அழுத்தம் கொடுத்ததால், கட்டாயத்தால், ஆகஸ்ட் 7ம் தேதியன்றே, ராஜினாமா செய்ய வேண்டி வந்தது.
ராஜினாமா கடிதம் தயாரிக்கும்படி, நான் யாரிடமும் கூறவில்லை. ஆனால் என் கண் எதிரிலேயே, ராஜினாமா கடிதத்தை டைப் செய்து, அதில் கையெழுத்திடும்படி தொந்தரவு கொடுத்ததால், சூழ்நிலைக்கு கட்டுப்பட்டு கையெழுத்திட்டேன்.
மேல்சபை தலைவருக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த சம்பவம், 1956 முதல் இதுவரை நடந்தது இல்லை. மேல்சபை தலைவர் பதவி விஷயத்தில், அரசு நடந்து கொண்டது சரியல்ல.
நான் என்ன தவறு செய்தேன், ஊழல் செய்தேனா, முறைகேடு செய்தேனா. எனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, அவர்களிடம் எந்த காரணமும் இல்லை. அரசின் செயல் எனக்கு மன வலியை அளித்துள்ளது. இனி, சாதாரண எம்.எல்.சி.,யாக கூட்டத்தில் பங்கேற்பேன்.
கட்சி விஷயத்தில் மேலிடம், என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் மேல்சபை தலைவர் பதவி தொடர்பாக, கட்சியின் லெட்டர் பேடில் என் பெயரை அறிவித்தது சரியல்ல.
நாட்டில் முதன் முறையாக இது போன்று நடந்துள்ளது. காங்கிரசில் யாருக்கும் என் மீது, அவநம்பிக்கை இல்லை. என்னை பற்றி கட்சி தலைவர்களுக்கு நல்ல கருத்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
