குழந்தைகளை சித்ரவதை செய்த மையம் தற்காலிகமாக மூடல்
குழந்தைகளை சித்ரவதை செய்த மையம் தற்காலிகமாக மூடல்
ADDED : ஜூலை 03, 2026 04:38 AM
எச்.ஏ.எல்.: வாஷிங் மெஷினில் குழந்தைகளை அடைத்து சித்ரவதை செய்த, பெங்களூரின் 'டே கேர்' மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பெங்களூரு எச்.ஏ.எல்., போலீஸ் எல்லைக்கு உட்பட்ட புரூக்பீல்டில், ஐ.டி., நிறுவனமான, 'கேப் ஜெமினி' இயங்குகிறது. இந்த நிறுவனத்தில் பகல் நேரத்தில் வேலை செய்யும் ஊழியர்கள், தங்கள் குழந்தைகளை கவனித்து கொள்ளும் வகையில், நிறுவனத்தின் வளாகத்தில் 'டே கேர்' மையம் செயல்படுகிறது. 2 முதல், 4 வயதுக்கு உட்பட்ட, 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றன.
இந்நிலையில், சேட்டை செய்யும் குழந்தைகளை அச்சுறுத்துவதற்காக, அந்த மையத்தில் உள்ள வாஷிங் மெஷினில் குழந்தைகளை அடைப்பது; கழிப்பறை கோப்பை மீது அமர வைத்து தண்ணீரை பீய்ச்சி அடிப்பது; கழிப்பறைக்குள் அடைப்பது என கொடூரமாக செயல்களை, அங்கு வேலை செய்த மஞ்சுளா, விஜயலட்சுமி, சிந்து, பவானி, பிந்து ஆகிய, 5 பெண் ஊழியர்கள் செய்தனர்.
இதுதொடர்பான வீடியோக்கள் 'வாட்ஸாப்' குழுக்களில் வெளியான நிலையில், குழந்தைகள் நல அதிகாரிகள் அளித்த புகாரில், ஐந்து பெண் ஊழியர்கள் மீதும் வழக்கு பதிவானது.
விசாரணைக்கு ஆஜராக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் தங்கள் வளாகத்தில் இயங்கி வந்த, அந்த மையத்தை கேப்ஜெமினி நிறுவனம் தற்காலிகமாக மூடியுள்ளது.
இந்நிலையில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சசிதர், முதல்வர் சிவகுமாருக்கு எழுதிய கடிதம்:
புரூக்பீல்டு டே கேரில் குழந்தைகளை சித்ரவதை செய்த சம் பவம் துரதிர்ஷ்டவசமானது. ஐ.டி., நிறுவனங்களில் பகலில் பணிக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், டே கேர் மையங்கள் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் குழந்தைகள் கல்வி, உடல்நலம், பாதுகாப்பு மிக முக்கியம். இத்தகைய மையங்களில், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படவில்லை.
இந்த மையங்களில் குழந்தைகள் மனரீதியாக துன்புறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். டே கேர் ஊழியர்கள் நியமிக்கப்படும் முன், அவர்களை பற்றிய தகவலை போலீசார் சரிபார்க்க வேண்டும். குழந்தைகள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊழியர்களை அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
