கே.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவு
கே.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவு
ADDED : ஜூலை 29, 2026 02:57 AM

பெங்களூரு: கே.பி.எஸ்.சி., நடத்திய கால்நடை மருத்துவ அதிகாரி தேர்வில் நடந்த முறைகேடு வழக்கை, சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., சலீம் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக அரசின் கால்நடை துறையில் 400 மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்பும் தேர்வை, கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக பொது சேவை ஆணையம் வெளியிட்டது.
பணிக்கு தேர்வானோர் பட்டியல், கடந்த 17ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வில் வெற்றி பெறாத 50க்கும் மேற்பட்ட தேர்வர்கள், பெங்களூரு விதான் சவுதா போலீசில் அளித்த புகாரில், மருத்துவ அதிகாரி பணிக்கு தேர்வாகியுள்ள 60 சதவீதம் பேர், தலா 80 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து உள்ளனர் என்று புகார் செய்தனர்.
தேர்வர்களிடம், சில இடைத்தரகர்கள் லஞ்சம் கேட்டதாக கே.பி.எஸ்.சி., சார்பில் உதவி செயலர் வீனாவும், விதான் சவுதா போலீசில் புகார் செய்தார். இந்த இரு புகார்களின் அடிப்படையில், கே.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா சாகுர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவானது.
விஜயபுராவில் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய சிக்கந்தர் சவுத்ரி, 46, பாகல்கோட்டின் ஜமகண்டியின் ஆரீப் முகமது முல்லா, 45, கைது செய்யப்பட்டனர்.
தேர்வு முறைகேடு வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று, பா.ஜ., வலியுறுத்துகிறது. விதான் சவுதா போலீஸ் நிலையத்தில் பதிவான இரண்டு வழக்குகளையும், சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி, மாநில போலீஸ் டி.ஜி.பி., சலீம் நேற்று உத்தரவிட்டார்.
தேர்வில் நடந்த முறைகேட்டை கண்டித்து அரசுக்கு எதிராக, பெங்களூரு சுதந்திர பூங்காவில், கர்நாடக மாநில அரசு பணி தேர்வர்கள் சங்கத்தினர் பஜனை பாடி நுாதன முறையில் நேற்று போராட்டம் நடத்தினர்.
இதில் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி பங்கேற்றனர்.
