ADDED : செப் 05, 2026 03:34 AM

கர்நாடகாவில் ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். ஆனால், இந்த ஆண்டு குறைந்த மழைப்பொழிவு பதிவானது. பல இடங்களில் பருவமழை பொய்த்ததால் மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது.
முதல்கட்டமாக, 101 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளன என மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, ஹாவேரி மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் சொந்த செலவில், விமானம் மூலம் மேக விதைப்பு செய்வதன் மூலம் செயற்கை மழை பெய்ய வைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
இதன் அடிப்படையில் மாநில அரசு, மாநிலம் முழுதும் செயற்கை மழை பெய்ய வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தது.
ரூ.28.52 கோடி கர்நாடகாவின் நான்கு வருவாய் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் செயற்கை மழை பெய்ய வைக்க, விமானம் மூலம் மேக விதைப்பு செய்யும் பணிகளை, நீர்ப்பாசன துறை அமைச்சர் செலுவராயசாமி நேற்று துவக்கி வைத்தார்.
பெங்களூரு எச்.ஏ.எல்., விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தை கொடியசைத்து அவர் துவக்கி வைத்தார்.
பின், அவர் கூறியதாவது:
தற்போது மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன் சரியான அளவை இப்போதே கணிக்க முடியாது. பருவமழை காலம் முடியும் நிலையில் உள்ளது. இம்மாத இறுதிக்குள் குடிநீரை சேமிக்கவில்லை என்றால், கடுமையான குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.
செயற்கை மழை பெய்ய வைக்கும் பணியை துவக்கியுள்ளோம். கடந்த முறை இந்த திட்டம், 35 சதவீதம் வெற்றி பெற்றது. லாபமோ, நஷ்டமோ, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். இதனால் அரசுக்கு ஏற்படும் நிதி சுமையை பற்றி கவலைப்படவில்லை. மொத்தம் 60 நாட்கள் பணிகள் நடக்கும். இதற்காக 28.52 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பணிகளை திறம்பட மேற்கொள்ள, அரசு இரண்டு குழுக்களை அமைத்துள்ளது. மழைப்பொழிவு இல்லாத இடங்கள், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள், விவசாய நெருக்கடியை எதிர்கொள்ளும் மாவட்டங்களில் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் நடக்கும்.
ஒவ்வொரு, 2 மணி நேரத்திற்கும் கிடைக்கும் வானிலை தரவுகள் அடிப்படையில் பணிகள் தீர்மானிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பல தாலுகாக்கள் இந்நிலையில், பல்லாரி, விஜயநகரா, பாகல்கோட் மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, முதல்வர் சிவகுமார் ஹெலிகாப்டரில் சென்று நேற்று ஆய்வு செய்தார்.
பாகல்கோட்டில் அவர் அளித்த பேட்டி:
சமீபத்தில் கதக், தார்வாட், ஹாவேரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தேன். ஏற்கனவே, 101 தாலுகாக்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்துள்ளோம். அடுத்த, 15 நாட்களில் மேலும் பல தாலுகாக்களை வறட்சி பாதித்த பகுதி என அறிவிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
பெரும்பாலான இடங்களில் பயிர் விளைச்சல் நன்றாக இல்லை. பாகல்கோட்டில் நிலைமை மோசமாக உள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்படி வறட்சி பாதித்த தாலுகாக்களை அறிவிக்கிறோம்.
கே.ஆர்.எஸ்., அணைக்கு நீர்வரத்து குறைவாக உள்ளது. தமிழக விவசாயிகள் பயிருக்கு தண்ணீர் கேட்கின்றனர். இதுகுறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம். தற்போது கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு தண்ணீர் திறக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
