சி.எஸ்.ஆர்., நிதியை கல்விக்காக செலவிட நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு
சி.எஸ்.ஆர்., நிதியை கல்விக்காக செலவிட நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு
ADDED : ஜூலை 24, 2026 01:05 AM

பெங்களூரு: ''சி.எஸ்.ஆர்., நிதியை ஆரம்ப கல்விக்காக செலவிடுங்கள்,'' என, பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, முதல்வர் சிவகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
பெங்களூரு கே.ஜி., சாலையில் உள்ள கர்நாடக வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு அலுவலகத்தின், எம்.வி.அரங்கில், உலகளாவிய பெருநிறுவன சமூக பொறுப்பு மற்றும் நிலையான வளர்ச்சி உச்சி மாநாடு நேற்று நடந்தது.
தனிக்குழு மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
பொது, தனியார் நிறுவனங்கள் தங்கள் லாபத்தின் ஒரு பகுதியை சமூக நல திட்டங்களுக்காக கட்டாயமாக செலவிடுவதை சி.எஸ்.ஆர்., எனும் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி என நாம் கூறுகிறோம்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், சி.எஸ்.ஆர்., நிதியை, கல்வி துறைக்கு பயன்படுத்த முடிவு செய்தோம். சில நிறுவனங்கள் சி.எஸ்.ஆர்., நிதியை சமூக நலனுக்காக சிறப்பாக செயல்படுத்து கின்றன.
ஆனால், 50 சதவீதம் நிறுவனங்கள் நிதியை தவறாக பயன்படுத்துகின்றனர். நிதி எங்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய அதிகாரிகளை கொண்ட தனி குழு அமைக்கப்படும்.
நகர்ப்புறங்களை போல கிராமப்புற மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும். சி.எஸ்.ஆர்., நிதியின் ஒவ்வொரு பைசாவையும் ஆரம்ப கல்விக்காக செலவிடுங்கள் என்று நிறுவனங்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.
கட்டாயம் சி.எஸ்.ஆர்., நிதியை பயன்படுத்தி கிராமப்புறங்களில் பள்ளிகள் கட்டப்பட வேண்டும். இதற்காக, 2,000 இடங்களை நாங்கள் அடையாளம் கண்டு உள்ளோம். எங்களிடம் பணம் தர வேண்டாம். நீங்களே முதலீடு செய்து பள்ளிகளை கட்டி கொடுங்கள்.
நகர் புறங்களில், 50,000 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள், கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளை கட்டாயமாக தத்தெடுக்க வேண்டும்.
அப்படி செய்யவில்லை என்றால் தனியார் பள்ளி கட்டணங்களுக்கு உச்சவரம்பை அரசு நிர்ணயிக்கும்.
தனியார் பள்ளி ஆசிரியர்களை விட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறந்த சம்பளம் கிடைக்கிறது. நானும் மூன்று பள்ளிகளை நடத்துகிறேன்.
கிராமப்புற அரசு பள்ளியை தத்தெடுக்க வேண்டும் என்று நான் கூறியதால், எனது மகள் அரசு பள்ளியை தத்தெடுத்துள்ளார்.
என் கதை சி.எஸ்.ஆர்., நிதியை முதலில் துவக்க செலவிட்டு அதற்கு பின், சுகாதாரத்திற்கு செலவிடலாம். இதுதொடர்பாக நாங்கள் கொள்கை வகுப்போம். நமது மாநில குழந்தைகள் உலக அளவில் போட்டியிடுகின்றனர்.
பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்த போது தான், சி.எஸ்.ஆர்., நிதி திட்டத்தை செயல்படுத்தினார். இதற்காக அவரை நினைவு கூர வேண்டும். கல்வி கற்க நான், கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்தவன்.
இது என் கதை மட்டுமல்ல. பலரின் கதையும் இது தான். பெங்களூரு நகரில் மக்கள் தொகை தற்போது, 1.40 கோடியாக உள்ளது. உலகமே, பெங்களூரை திரும்பி பார்க்கிறது.
ஒரு காலத்தில் உலக தலைவர்கள் டில்லிக்கு வந்து விட்டு, நாட்டின் பிற நகரங்களுக்கு செல்வர். இப்போது பெங்களூரு வந்துவிட்டு பிற நகரங்களுக்கு செல்கின்றனர். அந்த அளவு உலகளாவிய நகரமாக பெங்களூரு மாறியுள்ளது. உற்பத்தி துறையிலும் பெங்களூரு முன்னேற்றம் அடைந்துள்ளது.
ரத்தன் டாடா தொழிலாளர்கள் நலனை போலவே முதலாளிகள் நலனையும் பாதுகாக்க வேண்டும். முதலாளிகள் நன்கு இருந்தால் தான் தொழிலாளியும் நன்றாக இருப்பார். முதலாளிகள் மீது சுமை ஏற்படாமல் நாம் உறுதி செய்ய வேண்டும்.
நான் ஒரு முறை ரத்தன் டாடாவை சந்தித்த போது, வேகமாக செல்ல விரும்பினால் தனியாக செல்லுங்கள். தொலைதுாரம் செல்ல விரும்பினால் மற்றவர்களுடன் இணைந்து செல்லுங்கள் என அறிவுரை கூறினார்.
நாம் அனைவரும் ஒருங்கிணைந்து முன்னேறுவது அவசியம். தற்போது அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில், 15 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில், 7.5 சதவீதம் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்.
மன்னர்கள் காலத்தில் இருந்தே கர்நாடக வர்த்தக மற்றும் தொழில் சபை அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படுகிறது. நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களித்துள்ளது.
இன்று தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு உள்ளது. இவை இல்லாத காலத்திலும் வர்த்தக மற்றும் தொழில் சபை நாட்டிற்காக பணியாற்றி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மாநாட்டில் வர்த்தக மற்றும் தொழில் சபை தலைவர் உமா ரெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
