செயல்படாத கல் குவாரிகளில் 22,700 டன் குப்பை கொட்ட முடிவு
செயல்படாத கல் குவாரிகளில் 22,700 டன் குப்பை கொட்ட முடிவு
ADDED : ஜூலை 24, 2026 01:05 AM
பெங்களூரு: பெங்களூரில் பல இடங்களில் சேர்ந்துள்ள, 22,700 டன் குப்பையை செயல்பாட்டில் இல்லாத, ஐந்து கல் குவாரிகளில் கொட்ட ஜி.பி.ஏ., முடிவு செய்து உள்ளது.
பெங்களூரில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல், 31ம் தேதி வரை 'கழிவுகளிலிருந்து சுதந்திரம்' என்ற மாபெரும் துாய்மை இயக்கம் நடத்தப்பட உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, நகரில் 1,616 பகுதிகளில் சேர்ந்துள்ள 22,700 டன் குப்பையை அகற்ற ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் முடிவு செய்தது.
இந்த குப்பையை நகரில் செயல்படாத நிலையில் உள்ள ஐந்து கல் குவாரிகளில் கொட்ட திட்டமிடப்பட்டுள்ளது. யரப்பனஹள்ளி, மாரேனஹள்ளி, வெங்கடபுரா, விட்டசந்திரா, கல்லுபாலு ஆகிய இடங்களில் உள்ள ஐந்து கல் குவாரிகளில் குப்பை கொட்டப்பட உள்ளது.
இது குறித்து, ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் கூறியதாவது:
குப்பையை கொண்டு செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தப்படும். இதன் மூலம், குவாரிகளை தவிர வேறு இடங்களில், குப்பை கொட்டப்படுவதை தடுக்க முடியும்.
காலிமனைகளில் உள்ள குப்பை, மனையின் உரிமையாளர்களே சுத்தம் செய்ய வேண்டும்.
ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் சுத்தம் செய்யப்படவில்லை என்றால் மாநகராட்சி ஊழியர்களே சுத்தம் செய்வர். சுத்தம் செய்ததற்கான தொகை, நில உரிமையாளரிடம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
