/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஜி ராம் ஜி' சட்டத்தை திரும்ப பெற கோரி கர்நாடக சட்டசபையில் முதல்வர் தீர்மானம்
/
'ஜி ராம் ஜி' சட்டத்தை திரும்ப பெற கோரி கர்நாடக சட்டசபையில் முதல்வர் தீர்மானம்
'ஜி ராம் ஜி' சட்டத்தை திரும்ப பெற கோரி கர்நாடக சட்டசபையில் முதல்வர் தீர்மானம்
'ஜி ராம் ஜி' சட்டத்தை திரும்ப பெற கோரி கர்நாடக சட்டசபையில் முதல்வர் தீர்மானம்
ADDED : பிப் 04, 2026 05:29 AM

பெங்களூரு: 'ஜி ராம் ஜி' சட்டத்தை திரும்ப பெற கோரி, கர்நாடக சட்டசபையில் முதல்வர் சித்தராமையா நேற்று தீர்மானம் தாக்கல் செய்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு பதிலாக, மத்திய அரசு கொண்டு வந்து உள்ள விக்சித் பாரத் ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற கோரும் தீர்மானத்தை, சட்டசபையில் தாக்கல் செய்து முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
நாட்டின் ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு மற்றும் அதிகார பரவலாக்க கொள்கைகளுக்காக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதை, இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.
கிராமப்புற மக்கள் வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தை ரத்து செய்தது, மத்திய அரசு ஒருதலைபட்சமாக எடுத்த முடிவு. ஜி ராம் ஜி சட்டம் கூட்டாட்சி அடிப்படை கொள்கைகளுக்கும், கிராமப்புற மக்களின் வாழ்வாதார உரிமைக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளது.
சம்பள செலவு 'ஜி ராம் ஜி' சட்டம் மகாத்மா காந்தியால் உருவாக்கப்பட்ட கிராம சுயராஜ்ஜிய நோக்கத்தை தோற்கடித்து உள்ளது. புதிய சட்டத்தின் மூலம் 125 நாட்கள் வேலை கிடைக்கும் என்று கூறினாலும், 50 நாட்கள் சம்பள செலவை மாநில அரசு தான் ஏற்க வேண்டும்.
டில்லியில் தங்க கோபுரத்தில் அமர்ந்து திட்டத்தை வகுத்து, கிராம சபைகளின் அதிகாரத்தை பறிக்கின்றனர்.
கிராம பஞ்சாயத்துகள் தங்கள் தேவைக்கு ஏற்ப பணிகளை தேர்வு செய்யும் சுதந்திரத்தை இழந்து விட்டன.
ஜி ராம் ஜி சட்டம் 12 மாதங்களுக்கு பதிலாக 10 மாதங்கள் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கிறது. அனைத்து கிராம பஞ்சாயத்துகளும், புதிய சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் என்பதில், எந்த உறுதியும் இல்லை. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி குறித்தும் உறுதி இல்லை.
புதிய சட்டம் கிராமப்புற தொழிலாளர்கள், பெண்கள், பட்டியல் சாதியினர், பழங்குடியினர், விவசாயிகள் உரிமைகளை பறித்து உள்ளது. இதனால் ஜி ராம் ஜி சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற கோரும் தீர்மானத்தை, இந்த சட்டசபை முன்வைக்கிறது.
இவ்வாறு பேசினார்.
கொள்ளை அரசு இந்த சட்டசபை என்று சித்தராமையா பயன்படுத்திய வார்த்தைக்கு, எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபை என்று கூறாதீர்கள்; காங்கிரஸ் என்று கூறுங்கள் என்று கோஷம் எழுப்பினர்.
இதற்கு சித்தராமையா பதில் அளிக்கையில், 'இந்த சட்டசபை, இந்த சட்டசபை, இந்த சட்டசபை' என்று மூன்று முறை கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். முதல்வரை மேற்கொண்டு பேச விடாமல், 'கொள்ளை அரசு, கொள்ளை அரசு' என்று கோஷம் எழுப்பினர்.
இதனால் பொறுமை இழந்த சித்தராமையா பேசுவதை நிறுத்திவிட்டு, காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று, எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க உத்தரவிட்டார்.
'உங்களுக்கு மட்டும் தான் கோஷம் போட தெரியுமா; எங்களிடம் 140 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்' என்று, சித்தராமையா ஆவேசமாக பேசினார்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாறி, மாறி கோஷம் எழுப்பியதால், சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. யார் என்ன பேசுகின்றனர் என்று தெரியவில்லை. இதையடுத்து சட்டசபையை சிறிது நேரம் சபாநாயகர் காதர் ஒத்திவைத்தார்.
சபை மீண்டும் கூடியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் கோஷம் எழுப்பியதால், சட்டசபையை இன்று காலை 10:00 மணி வரை, சபாநாயகர் ஒத்திவைத்தார்.

