/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
உண்டியல் எண்ணும் பணியில் தங்க நெக்லஸ் திருடிய அதிகாரி?
/
உண்டியல் எண்ணும் பணியில் தங்க நெக்லஸ் திருடிய அதிகாரி?
உண்டியல் எண்ணும் பணியில் தங்க நெக்லஸ் திருடிய அதிகாரி?
உண்டியல் எண்ணும் பணியில் தங்க நெக்லஸ் திருடிய அதிகாரி?
ADDED : பிப் 04, 2026 05:29 AM
பெங்களூரு: பெங்களூரு கரக திருவிழா நடக்கும் தர்மராய சுவாமி கோவிலுக்கு, உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்திய 122 கிராம் எடையுள்ள நெக்லஸை திருடியதாக, அறநிலைய துறை அதிகாரி மீது குற்றச்சாட்டு எழுந்தது. அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு நகரத்பேட்டில் பிரசித்தி பெற்ற தர்மராய சுவாமி கோவில் உள்ளது.
ஆண்டுதோறும் இங்கு நடக்கும் பெங்களூரு கரக திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்நிலையில், கோவிலின் நிர்வாக குழு முன்னாள் தலைவர் சதீஷ் நேற்று அளித்த பேட்டி:
தர்மராய சுவாமி கோவிலில் ஆண்டிற்கு ஒரு முறை, உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி, உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அறநிலைய துறை செயல் அதிகாரிகள் நாகராஜ், நவீன், கூடுதல் துணை கமிஷனர் ஜெகதீஷ், உதவி கமிஷனர் புருஷோத்தம், தாசில்தார் அரவிந்த் பாபு உள்ளிட்ட அதிகாரிகளும், போலீசார், பொதுமக்களும் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
அம்மனுக்கு பக்தர் ஒருவர் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய 122 கிராம் நெக்லஸை, செயல் அதிகாரி நாகராஜ் தனது உடையில் மறைத்து வைத்து எடுத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து அறநிலைய துறையில் பணியாற்றும் ஒருவர் எனக்கு தகவல் கொடுத்தார். நாகராஜிடம் நான் கேட்ட போது சரியாக பதில் அளிக்கவில்லை.
122 கிராம் இதனால் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம், உண்டியல் காணிக்கை எண்ணும் போது கிடைத்தது என்னென்ன என்று தகவல் கேட்டேன். அங்கிருந்து எனக்கு கிடைத்த தகவல்படி திருடப்பட்ட 122 கிராம் நெக்லசில் வெறும் 68 கிராம் நெக்லஸை திரும்ப உண்டியலில் போட்டது தெரிந்தது.
திருடப்பட்ட நெக்லஸ் மதிப்பு 20 லட்சம் ரூபாய். அதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நெக்லஸ் மட்டுமே திரும்ப வந்து உள்ளது.
நெக்லஸ் திருட்டில் அறநிலைய அதிகாரிகள், தாசில்தாருக்கும் தொடர்பு உள்ளது.
கடந்த ஆண்டு கரக திருவிழா நடத்தியதற்காக பணத்தை இன்னும் விடுவிக்கவில்லை. 10 லட்சம் ரூபாயை விடுவிக்க 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்கின்றனர். ஹிந்து கோவில்கள் மீது ஏன் இவர்கள் குறிவைக்கின்றனர். ஹிந்து கோவில்களை அறநிலைய துறை பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சஸ்பெண்ட் கோவிலுக்கு காணிக்கையாக வந்த நெக்லஸை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், செயல் அதிகாரி நாகராஜை சஸ்பெண்ட் செய்து, அறநிலையத்துறை கமிஷனர் சரத் உத்தரவிட்டார்.
இதுகுறித்து சதீஷ் கூறுகையில், ''எங்கள் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்து உள்ளது. இனிமேல் கடவுள் நகை மீது யாரும் கை வைக்க மாட்டார்கள். கரக திருவிழாவுக்காக செலவு செய்த, பணமும் எங்களுக்கு கிடைக்க, அறநிலையத்துறை கமிஷனர் சரத் உதவ வேண்டும்,'' என்றார்.
அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறுகையில், ''தர்மராய சுவாமி கோவிலில், காணிக்கையாக செலுத்தப்பட்ட நெக்லஸ் திருடப்பட்டது பற்றி, கோவில் நிர்வாக குழு முன்னாள் தலைவர் சதீஷ், ஊடகத்தினரிடம் பேசிய வீடியோ எனக்கு வந்தது. அறநிலையத்துறை கமிஷனருக்கு வீடியோவை அனுப்பி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்,'' என்றார்.

