
இயக்குநர் மன்சோரே இயக்கிய, துார தீர யானா' திரைப்படத்தின் டைட்டில் பாடல், சமீபத்தில் வெளியிடப்பட்டது. பெங்களூரில் இருந்து கோவா வரை நடக்கும் பயண கதை கொண்ட படம், இதில் அழகான காதல் கதையும் உள்ளதாம். ஜூலை 11ம் தேதி திரைக்கு வரவுள்ளது. விஜய் கிருஷ்ணா நாயகனாக, இவருக்கு ஜோடியாக பிரியங்கா குமார் நடித்துள்ளார். பெங்களூரு, உடுப்பி, குந்தாபுரா, கோகர்ணா, முருடேஸ்வரா, எல்லாபுரா, கோவா உட்பட, பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தமிழ் தொடர்களில் நடித்து வந்த பிரியங்கா குமார், வெள்ளித்திரைக்கு வந்த பின், பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. நல்ல கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார்.
கடந்த 1986ல், 'ஆனந்த்' திரைப்படம் மூலமாக, திரையுலகில் நுழைந்தவர் நடிகர் சிவராஜ்குமார். இவரது சினி பயணம் 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை 125 படங்களில் நடித்துள்ளார். அனைத்துமே சில்வர் ஜூப்ளி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். கன்னடத்தில் மிகவும் பிசியான நடிகர்களில், இவருக்கே முதலிடம். தற்போது இவரது கையில் ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. திரையுலகுக்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அவருக்கு, நடிகர்கள் உபேந்திரா, சுதீப், நாகார்ஜுன், சிரஞ்சீவி, தனஞ்செயா, நானி, இயக்குநர் பிரேம் உட்பட, பலர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
கன்னடத்தில் 'பைடர்' , 'நமோ பூதாத்மா' உட்பட, சில படங்களில் நடித்தவர் நடிகை லேகா சந்திரா. வளர்ந்து வரும் நிலையில், இவர் சத்தமில்லாமல் ஸ்ரேயஷ் தர்ஷனுடன், நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். ஸ்ரேயஷ் தர்ஷன், வேறு யாருமல்ல. வினோத் பிரபாகரின், 25வது திரைப்படமான 'பலராமன தினகளு' படத்தின் தயாரிப்பாளர். இவர்களுக்குள் சில காலமாகவே காதல் இருந்தது. வெளி உலகத்துக்கு தெரியாமல், தங்களின் காதலை ரகசியமாக வைத்திருந்த இவர்கள், தங்களின் குடும்பத்தினர் சம்மதத்துடன், நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். நிச்சயதார்த்த போட்டோக்களை சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டுள்ளனர்.
பரத் தயாரித்து, இயக்கும் 'கேலா' படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடக்கிறது. முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களை முணுமுணுக்க வைத்துள்ளது. பிரமோத் எழுதிய பாடலை, வேல் முருகன் பாடியுள்ளார். தியாகராஜ் இசை அமைத்துள்ளார். படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துள்ளது. சின்னத்திரை நடிகர் விஹான் பிரபஞ்சன் நாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ஆஷிகா ராவ் நடிக்கிறார். இயக்குநர் பரத், கன்னட திரையுலகின் மூத்த தயாரிப்பாளர் விஷ்ணு காந்தின் மகன். தந்தையின் வழிகாட்டுதலுடன், முதல் படத்தை தயாரித்து, இயக்கியுள்ளார்.
சாத்விக் பவன் இயக்கும், 'தாயவ்வா' திரைப்படம் திரைக்கு வந்து, சூப்பர்ஹிட்டாக ஓடுகிறது. பண்டைய காலத்தில் இருந்தே, பெண்கள் ஒதுக்கப்படுகின்றனர்; அடக்கி ஆளப்படுகின்றனர். அதி நவீன காலத்திலும், பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுவது, பால்ய விவாகம், வரதட்சணை கொடுமை என, பல விதமான துன்பங்களுக்கு ஆளாகின்றனர். பெண்களின் பிரச்னைகளை, 'தாயவ்வா' திரைப்படம், சமுதாயத்துக்கு, வெளிச்சம் போட்டு காட்டுகிறது. கிராமத்தின் அழகை காட்டியுள்ளனர். நடிகை கீதா பிரியா, தாயவ்வா கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியுள்ளார். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
'காந்தாரா' திரைப்படம், பெரிய அளவில் வெற்றி அடைந்ததால், அதில் நாயகியாக நடித்த சப்தமி கவுடாவுக்கு, அதிர்ஷ்டம் கதவை தட்டுகிறது. இந்த படத்தில் லீலா கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருந்தார். தற்போது கன்னடத்தில் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் வாய்ப்புகள் குவிகின்றன. இவரது நடிப்பில் தெலுங்கு படம், 'தம்முடு' திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. கன்னடத்தில் 'தி லைப் ஆப் அசோகா' படத்திலும், நீனாசம் சதீஷுக்கு ஜோடியாக சப்தமி கவுடா நடிக்கிறார். இதை தவிர இயக்குநர்களிடம், புதிய படங்களுக்கான கதை கேட்கிறார். இவரை ஒப்பந்தம் செய்வதில், இயக்குநர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.