/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு துல்லியமாக நடத்த கலெக்டர் அறிவுரை
/
டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு துல்லியமாக நடத்த கலெக்டர் அறிவுரை
டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு துல்லியமாக நடத்த கலெக்டர் அறிவுரை
டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு துல்லியமாக நடத்த கலெக்டர் அறிவுரை
ADDED : பிப் 20, 2026 04:52 AM
கோலார்: ''கோலார் மாவட்டத்தில் நடைபெற உள்ள டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பை, துல்லியமாகவும், முறையாகவும் நடத்த, அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்,'' அதிகாரிகளை மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவி அறிவுறுத்தினார்.
கோலார் மாவட்ட நிர்வாக அலுவலகத்தில், அதிகாரிகளின் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பை, மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கணக்கெடுப்பில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து அரசின் தலைமை செயலாளருக்கு நேரடியாக தெரிவிக்கப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு கணக்கெடுப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போது, அவர்கள் மொபைல் செயலியை பயன்படுத்துவது குறித்த அடிப்படை அறிவையாவது பெற்றிருக்க வேண்டும். கர்ப்பிணியர், சிறு குழந்தைகள் உள்ளவர்கள் அல்லது மூத்த குடிமக்களை இந்த பணிக்கு நியமிக்க கூடாது. கணக்கெடுப்பு பணியில் உள்ள அதிகாரிகள் அனைவருக்கும் முறையான பயிற்சி வழங்கப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக, அலுவலகங்களுக்கு தேவையான கணினிகள், ஸ்கேனர்கள், அச்சுப்பொறிகள் மற்றும் இன்டர்நெட் வசதிகளை வழங்க மானியங்கள் வழங்கப்படும். இவை அலுவலகத்தின் நிரந்தர சொத்தாகவே இருக்கும். கணக்கெடுப்பு பணி பிப்ரவரி, 2027 முதல் தொடங்கும். வீடுகளை பட்டியலிடுதல் மற்றும் தொகுதிகளை அடையாளம் காணும் பணி தற்போதைக்கு நடைபெறும். இம்முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு முற்றிலும் டிஜிட்டல் மையமாக்கப்படும்.
மேலும் மாவட்ட அளவிலான அதிகாரிகள், மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு இணையதளம் மூலம் செயல்பாடுகளை கண்காணிப்பர். கள அளவிலான கணக்கெடுப்பாளர்கள் வீட்டு பட்டியல், தொகுதி கிரியேட்டர் செயலியில் பயன்படுத்தி, புவிசார் குறி சொற்கள் மூலம் ஒவ்வொரு தொகுதிகளும் உள்ள வீடுகளின் இருப்பிடம், மற்ற அளவை அடையாளம் காண்பார்கள்.
பொதுமக்கள் சுயமாக பதிவு செய்து தகவல்களை பெறுவதற்காக, சுய கணக்கீட்டு போர்டல் மற்றும் சாப்ட்வேர் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டிலும் கிடைக்கிறது. மற்றும், 16 பிராந்திய மொழிகளில் இது செயல்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக மாவட்ட அளவில், மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரியாக உதவி கலெக்டரும், கூடுதல் மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரியாக, சி.பி.ஓ.,வும் நியமிக்கப்பட்டு உள்ளனர். தாலுகா மட்டத்தில் தாசில்தார் பொறுப்பு அதிகாரியாக செயல்படுவார். டிஜிட்டல் தகவல்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், இவைகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு அமைப்பும் அமலில் இருக்கும்.
ஒவ்வொரு மொபைலின் இ.எம்.இ.ஐ., எண்ணும் பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பிரவீன் பாக்யவாடி, கூடுதல் மாவட்ட கலெக்டர் எஸ். எம். மங்களா, துணை பிரிவு அதிகாரி ரேணுகா பிரசாத் திலீப், மாவட்ட மக்கள் தொகை கணக்கீடு அதிகாரி குரு மகா தேவய்யா, அனைத்து நகராட்சி மன்றங்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் தொடர்புடைய துறைகளின் மாவட்ட அளவிலான அதிகாரிகள் பங்கேற்றனர்.

