கோலார் மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகாரிகளுக்கு கலெக்டர் ரவி எச்சரிக்கை
கோலார் மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகாரிகளுக்கு கலெக்டர் ரவி எச்சரிக்கை
ADDED : ஏப் 16, 2026 03:59 AM
கோலார்: அடுத்த மூன்று மாதங்களில் கோலார் மாவட்டத்தின் 239 கிராமங்கள், நகராட்சி பகுதிகளில் 52 வார்டுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக, கலெக்டர் எம்.ஆர்.ரவி தெரிவித்தார்.
கோலார் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்திற்கு தலைமை வகித்து, ரவி பேசியதாவது:
கோலார் மாவட்டத்தில் கோடை வெப்பத்தை திறம்பட சமாளிக்கவும், குடிநீர் பற்றாக்குறையை தடுக்கவும், அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் 70 தனியார் போர்வெல்கள், நகர்ப்புறங்களில் 24 போர்வெல்கள் அதிக நீர் வழங்குபவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.
கட்டணம் நிர்ணயம் தற்போது பங்கார்பேட்டை, தங்கவயல், மாலுார் தாலுகாக்களில் 15 கிராமங்களுக்கு தனியார் போர்வெல்கள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. அவசர காலங்களில் டேங்கர்கள் மூலம் தண்ணீர் வினியோகிப்பதற்கு கணிசமான கட்டணம் நிர்ணயிப்பதை, அந்தந்த தாலுகா தாசில்தார் கவனிக்க வேண்டும்.
எரகோள் நீர்த்தேக்கத்தில் இருந்து கோலார், மாலுார், பங்கார்பேட்டை நகராட்சிகளின் பல்வேறு வார்டுகளுக்கு தினமும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. தற்போது, அந்த நீர்த்தேக்கத்தில் போதுமான அளவுக்கு தண்ணீர் உள்ளது. நடப்பு கோடை காலத்திற்கு தேவையான நீர் இருப்பு போதுமானதாக உள்ளது.
கடந்த 2025 ஜனவரி முதல் நவம்பர் வரை கோலார் மாவட்டத்தில் 73.5 செ.மீ., மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், 92.7 செ.மீ., மழை பெய்தது. இது, 26 சதவீதம் அதிகமாகும். 2026, ஜனவரி 1 முதல் ஏப்ரல் 12 வரை 24.6 செ.மீ., பெய்ய வேண்டும். ஆனால், 26 செ.மீ., மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
நீர்மட்டம் அதிகரிப்பு இதனால், கோலார் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. 2019ல் 77.06 மீட்டர் ஆழத்தில் கிடைத்த தண்ணீர், 2025ல் 37.52 மீட்டரில் கிடைக்கிறது.
மாவட்ட வெப்ப அலை செயல்திட்டம் 2026ஐ நடைமுறைப்படுத்துவதன் மூலம் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து தாலுகாக்களிலும் உள்ள மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள், ஓ.ஆர்.எஸ்., கரைசல்கள் ஆகியவை கையிருப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது, வேலை நேரத்தை மாற்றி, அமைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு பேசினார்.
