கடித்து குதறிய தெரு நாய்கள் கல்லுாரி மாணவி 'சீரியஸ்'
கடித்து குதறிய தெரு நாய்கள் கல்லுாரி மாணவி 'சீரியஸ்'
ADDED : மே 24, 2026 11:23 PM
பெங்களூரு: நடைபயிற்சிக்கு சென்ற போது, தெரு நாய்கள் கடித்ததில், இரண்டு மாணவியர் காயமடைந்தனர். ஒரு மாணவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஹாவேரியை சேர்ந்தவர் சவுஜன்யா, 20. தெலுங்கானாவை சேர்ந்தவர் நிஷ்விதா, 20. இவர்கள் பெங்களூரின் நாகரபாவியில் உள்ள அம்பேத்கர் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் பல்கலைக்கழகத்தில், எம்.எஸ்சி., மூன்றாம் ஆண்டு படிக்கின்றனர். பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ளனர்.
மாணவியர் இருவரும், நேற்று முன்தினம் காலை வழக்கம் போல, பெங்களூரு பல்கலைக்கழகத்தின் ஞானபாரதி வளாகத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தெரு நாய்கள் கூட்டம் அவர்கள் மீது பாய்ந்து கடித்தன. இதை கண்ட அப்பகுதியினர், நாய்களை விரட்டி மாணவியரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
நாய்களின் தாக்குதலில், சவுஜன்யாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நிஷ்விதா லேசான காயங்களுடன் தப்பினார்.
இந்த சம்பவத்தால், அப்பகுதியில் வசிக்கும் மக்களும், பல்கலைக்கழக மாணவர்கள் பீதியடைந்துள்ளனர்.
பல நாட்களாக இப்பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகம் உள்ளது. இதற்கு முன் பலரும் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர். இந்த பிரச்னைக்கு, விரைவில் தீர்வு காணும்படி வலியுறுத்தி உள்ளனர்.
