/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'நீர்நிலைகளை பாதுகாக்க வாருங்கள்'
/
'நீர்நிலைகளை பாதுகாக்க வாருங்கள்'
ADDED : ஜூலை 09, 2025 06:43 AM

எச்.ஏ.எல். : ''நம்மை சுற்றி இருக்கும் செடி, கொடிகளையும், நீர் நிலைகளையும் பாதுகாக்க வேண்டும். மரங்கள் இருந்தால் தான், மழை பெய்யும். மழை பெய்தால் தான், நீர் கிடைக்கும். நீர் கிடைத்தால், உயிர் வாழ முடியும்,'' என, பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
பெங்களூரு எச்.ஏ.எல்., விமானபுரா பகுதியில், தெய்வானையம்மாள் தமிழ்ப் பள்ளி உள்ளது. ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. பெங்களூரில் உள்ள பழமையான தமிழ் பள்ளிகளில் ஒன்றாக இன்றளவும் திகழ்கிறது. தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய தலைவருமான ராம்பிரசாத் மனோகர், நேற்று இங்கு வந்தார்.
விழிப்புணர்வு
வாரியம் சார்பில், பள்ளி வளாகத்தில், மா, கொய்யா, எலுமிச்சை, சீத்தாப்பழம் உட்பட பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு, மாணவ - மாணவியர், ஆசிரியர்கள் மூலமும் நடவைத்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மாணவர்களிடையே அவர் பேசியதாவது:
நானும் கூட உங்களை போல் முழுக்க முழுக்க தமிழ் வழியில் படித்து வந்த ஏழை மாணவன். கண்டிப்பாக உங்களாலும், என்னை போல பெரிய அளவில் வெற்றி பெற முடியும். தாய், தந்தையிடம் வசதி இல்லையே, சாதாரண பள்ளியில் படிக்கிறோமே என்று எண்ணாமல், உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.
கண்டிப்பாக உங்களின் முயற்சி, படிப்பு, உங்களையும் கூட ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக மாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. பிறந்திருக்கிற குடும்ப சூழ்நிலையோ, வாழ்கின்ற வாழ்க்கை அமைப்போ, படிக்கின்ற படிப்போ, பள்ளிக்கூடமோ எதுவுமே உங்களுக்கு தடையாக இருக்கப்போவதில்லை.
மேலாக இந்த பள்ளிக்கூடம் தான், வாழ்க்கையில் எப்படி போராடி வெற்றி பெற வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும். சாதாரண அரசு பள்ளியில் படித்த அப்துல் கலாம் தான், பின்னாளில் ஜனாதிபதியாக நாட்டின் உயர்ந்த பதவியை அடைந்தார்.
நம்மை சுற்றி இருக்கும் செடி, கொடிகளையும், நீர் நிலைகளையும் பாதுகாக்க வேண்டும். மரங்கள் இருந்தால் தான், மழை பெய்யும். மழை பெய்தால் தான், நீர் கிடைக்கும். நீர் கிடைத்தால், உயிர் வாழ முடியும்.
திருவள்ளுவர்
'நீரின்றி அமையாது உலகு' என்று திருவள்ளுவர் கூறியது போன்று, நீருக்கு மரங்கள் தேவை. எனவே தான், உங்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நீங்கள் அவற்றை பராமரிக்க வேண்டும். இந்த பள்ளிக்கு, என்னால் முடிந்த அனைத்து உதவியையும் செய்ய தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளி ஆசிரியைகள் சாந்தி, லீமா, தேவி, சுதா, சுந்தரி; குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைமை பொறியாளர் ஜெய்சங்கர், மண்டல செயற்பொறியாளர் பசவராஜ் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
எங்கள் பள்ளிக்கு, ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி வந்திருப்பது இதுவே முதல் முறை. அதுவும் தமிழர் என்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. சுற்றுச்சூழல், நீர் நிலைகள் பாதுகாப்பு குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
லதா ராம்குமார்,
தலைமை ஆசிரியை,
தெய்வானையம்மாள் தமிழ்ப்பள்ளி
**