அமைச்சர் பதவி மறுக்கப்பட்ட காங்., தலைவர்கள் ஆலோசனை
அமைச்சர் பதவி மறுக்கப்பட்ட காங்., தலைவர்கள் ஆலோசனை
ADDED : ஆக 12, 2026 12:08 AM

மைசூரு: அமைச்சர் பதவி கிடைக்காததால், மைசூரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
முதல்வர் சிவகுமார் தலைமையில், இரண்டாம் கட்டமாக 19 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இதில், முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர்களான மஹாதேவப்பா, வெங்கடேஷ், தன்வீர் செய்டுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தியில் இருந்தனர்.
நேற்று அரசு விருந்தினர் மாளிகையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
கூட்டத்துக்கு பின் தன்வீர் செய்ட் கூறியதாவது:
எங்கள் கட்சியில் அனைத்தும் சரியாக உள்ளன என்று கூறமாட்டோம்.
எனவே, மாவட்டத்தின் மூன்று மூத்த தலைவர்கள் இன்று ஒன்றாக கூடி, எங்களுக்கு ஏற்பட்ட அநியாயம் குறித்து விவாதித்தோம். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இப்போது கூற மாட்டோம்.
சாமுண்டீஸ்வரி அன்னையின் ஆசீர்வாதத்துடன் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். தற்போது நாங்கள் யாருக்கும் எதிராக இல்லை. எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது குறித்து மேலிடத்தில் பேசுவோம்.
மூவருக்கும் தனித்தனி சமூகங்களின் ஆதரவு உள்ளது. எங்கள் பலம் குறித்து பின்னர் பேசுவோம். இப்போது நாங்கள் யாரையும் குறை கூற மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
