முஸ்லிம்கள் குறித்து சர்ச்சை கருத்து நலபாடுக்கு காங்., பொறுப்பாளர் கண்டிப்பு
முஸ்லிம்கள் குறித்து சர்ச்சை கருத்து நலபாடுக்கு காங்., பொறுப்பாளர் கண்டிப்பு
ADDED : ஏப் 07, 2026 05:25 AM

தாவணகெரே: தாவணகெரே தெற்கு தொகுதியில், சீட் கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள முஸ்லிம்களை சமாதானம் செய்ய சென்ற, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் முகமது நல்பாட், சர்ச்சைக்குரிய வகையில் பேசி, தலைவர்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார்.
தாவணகெரே தெற்கு தொகுதி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்த சாமனுார் சிவசங்கரப்பா காலமானதால், அத்தொகுதியில், வரும், 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால், இம்முறை தங்களுக்கு சீட் தரும்படி, முஸ்லிம் தலைவர்கள் நெருக்கடி கொடுத்தனர்.
வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கானும், முஸ்லிம் மதத்தவருக்கு சீட் கிடைக்க செய்ய முயற்சித்தார். ஆனால், சாமனுார் சிவசங்கரப்பாவின் பேரனும், தோட்டக்கலைத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுனின் மகனுமான சமர்துக்கு, காங்., மேலிடம் சீட் வழங்கியது. இதனால், முஸ்லிம் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அவர்களை சமாதானம் செய்ய முஸ்லிம் தலைவர்கள் தாவணகெரே சென்றுள்ளனர். அதே போன்று, இளைஞர் காங்., முன்னாள் தலைவர் முகமது நல்பாடும், நேற்று முன்தினம் சென்றார்.
தலைவர்களை சமாதானம் செய்யும் அவசரத்தில் அவர், 'தாடி வைத்துள்ளவர்கள், தொப்பி அணிந்தவர்கள் எல்லாம், உண்மையான முஸ்லிம்கள் அல்ல' என்று கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சில முஸ்லிம் மத தலைவர்களும், பிரமுகர்களும் முதல்வரிடமும், மாநில பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவிடம் புகார் அளித்துள்ளனர்.
'முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தும், அந்த சமுதாயத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியுள்ளார். நல்பாட் நாவை கட்டுப்படுத்த வேண்டும்' என்றும் எச்சரித்தனர்.
இதை தீவிரமாக கருதிய சுர்ஜேவாலா, நல்பாடை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வன்மையாக கண்டித்துள்ளார். முதல்வர் சித்தராமையாவும் கூட கண்டித்ததாக கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் கட்சியின் எந்த தலைவரும், விருப்பப்படி பேசக்கூடாது என, எச்சரித்துள்ளனர். இதனால், தர்ம சங்கடத்துக்கு ஆளான நல்பாட், தாவணகெரேவில் இருந்து, கேரளாவுக்கு சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
