பிடதி டவுன்ஷிப் விவகாரத்தில் நாடகம் குமாரசாமிக்கு காங்.,- எம்.எல்.ஏ., கண்டனம்
பிடதி டவுன்ஷிப் விவகாரத்தில் நாடகம் குமாரசாமிக்கு காங்.,- எம்.எல்.ஏ., கண்டனம்
ADDED : ஜூன் 24, 2026 12:16 AM

பெங்களூரு: ''பிடதி டவுன்ஷிப் விவகாரத்தில் நாடகம் போடுவதை மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி நிறுத்த வேண்டும்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரில் அவர் அளித்த பேட்டி:
பிடதி டவுன்ஷிப்பிற்கு நிலம் கையகப்படுத்துவது குறித்து பகிரங்க விவாதம் நடத்த வரும்படி, முதல்வர் சிவகுமாருக்கு, மத்திய அமைச்சர் குமாரசாமி சவால் விடுத்தார். இதை ஏற்று கொண்ட முதல்வரும், விதான் சவுதாவுக்கு வரும்படி குமாரசாமிக்கு அழைப்பு விடுத்தார். ஆனாலும், பைரமங்களா கிராமத்தில் வைத்தே விவாதம் நடத்த வேண்டும் என்று குமாரசாமி அடம் பிடிப்பது ஏன்?
வெளி மாவட்ட விவசாயிகளை பிடதிக்கு அழைத்து வந்து, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வைக்கின்றனர். விதான் சவுதாவில் விவாதம் நடத்த குமாரசாமி விரட்டும். வர விரும்பவில்லை என்றால், அவரை அப்படியே விட்டு விடலாம்.
விவசாயிகள் நம்பிக்கையை பெற்று தான், பிடதி டவுன்ஷிப் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. குமாரசாமி கூறியதை விட விவசாயிகளுக்கு நாங்கள் அதிக பணம் கொடுக்கிறோம். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்போம்.
சித்தராமையா முதல்வராக இருந்த போதே டவுன்ஷிப் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அப்போது எல்லாம் அமைதியாக இருந்த, ம.ஜ.த., தலைவர்கள், சிவகுமார் முதல்வர் ஆனதும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்; நாடகம் போடுவதை குமாரசாமி நிறுத்த வேண்டும்.
விவசாயிகளுக்காக நிகில் குமாரசாமி, 5 ஏக்கர் நிலத்தை விட்டு கொடுத்தாலும், அவரது பெயரை வைக்கிறோம். குமாரசாமிக்கு இப்போது துாக்கமே வரவில்லை. மத்திய அமைச்சரான அவர், தனது துறையில் கவனம் செலுத்தாமல், கர்நாடகா அரசியல் மீதே கவனம் செலுத்துகிறார்.
முதல்வர் சிவகுமாரின் சொத்துகளை பற்றி பேசுகின்றனர். முதலில் தனது சொத்து மதிப்பை குமாரசாமி வெளியிடட்டும். நீங்கள் நேர்மையானவர் என்று நிரூபியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
