ராஜினாமா கடிதத்தை அங்கீகரிக்க வேண்டாம் சட்டசபை செயலருக்கு காங்., - எம்.எல்.ஏ., கடிதம்
ராஜினாமா கடிதத்தை அங்கீகரிக்க வேண்டாம் சட்டசபை செயலருக்கு காங்., - எம்.எல்.ஏ., கடிதம்
ADDED : ஆக 05, 2026 11:14 PM

பெங்களூரு: 'எனது ராஜினாமா கடிதத்தை அங்கீகரிக்க வேண்டாம்' என, சட்டசபை செயலருக்கு, காங்கிரஸ்- - எம்.எல்.ஏ., யஷ்வந்த்ராய கவுடா பாட்டீல் கடிதம் எழுதியுள்ளார்.
விஜயபுராவின் இண்டி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., யஷ்வந்த்ராய கவுடா பாட்டீல்.
அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில், கடந்த 3ம் தேதி தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக, அப்போதைய தற்காலிக சபாநாயகர் ருத்ரப்பா லமானியிடம் கடிதம் அளித்தார்.
அவரது கடிதம் சட்டசபை செயலகத்திற்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலையில் யஷ்வந்த்ராய கவுடா பாட்டீலிடம், முதல்வர் சிவகுமார் மொபைல் போனில் பேசினார்.
சமாதானம் 'நமது நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, இண்டி தொகுதியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் யாருக்கும், அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. மூன்று முறை நான் வெற்றி பெற்றும் அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்காமல் போனது' என்று கூறி, தனது அதிருப்தியை யஷ்வந்த்ராய கவுடா பாட்டீல் வெளிப்படுத்தியுள்ளார்.
அவரை சமாதானம் செய்த சிவகுமார், 'உங்கள் தொகுதிக்கு தேவையான நிதியை ஒதுக்குகிறேன். ராஜினாமாவை வாபஸ் பெறுங்கள்' என்று கேட்டு கொண்டார். இதற்கு, எம்.எல்.ஏ.,வும் அரை மனதாக ஒப்பு கொண்டார்.
அதிருப்தி இதனால், எம்.எல்.ஏ., வீட்டிற்கு அமைச்சர் லட்சுமண் சவதியை, சிவகுமார் அனுப்பினார். பாட்டீலிடம் நடத்திய பேச்சின் போது, 'நான் உங்கள் நண்பர். நானே இப்போது தான் அமைச்சராகி உள்ளேன். வேண்டுமென்றால் எனது அமைச்சர் பதவியை, உங்களுக்கு விட்டு தருகிறேன்' என, லட்சுமண் சவதி கூறியுள்ளார்.
'வேண்டாம் நீங்களே அமைச்சராக இருந்து கொள்ளுங்கள்' என கூறிய பாட்டீல், ராஜினாமா முடிவில் பின்வாங்கினார். பின், சட்டசபை செயலர் விசாலாட்சிக்கு அனுப்பிய கடிதத்தில், ராஜினாமா கடிதத்தை அங்கீகரிக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டார்.
இதற்கிடையே, அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில், கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணைய தலைவர் பதவியை, ராய்ச்சூர் ரூரல் எம்.எல்.ஏ., பசனகவுடா தத்தல் நேற்று ராஜினாமா செய்தார்.
