ADDED : ஜூன் 19, 2026 01:17 AM
பெங்களூரு: கர்நாடக மேலவை தேர்தலில் எதிர்பாராத பல சம்பவங்கள் நிகழ்ந்தன. முதல்வராக பதவியேற்ற சிவகுமார், தன் பலத்தை நேற்று நிரூபித்தார். பா.ஜ., - ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்களை, தன் கட்சிக்கு ஆதரவாக ஓட்டு போட வைத்தது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெற்றி பெற்ற ஏழு எம்.எல்.சி.,க்களில் காங்கிரசின் ஹரிபிரசாத்தும், திப்பண்ணாவும் எம்.எல்.சி.,க்களாக உள்ளவர்கள். மற்ற 5 பேரும் மேல்சபைக்கு புதியவர்கள்.
மொத்தம் 75 எம்.எல்.சி.,க்களை கொண்ட கர்நாடக மேல்சபைக்கு, நேற்று நடந்த தேர்தலுக்கு முன்பு, காங்கிரசுக்கு 37, காங்., ஆதரவு சுயேச்சை ஒருவர் என 38 பேர் இருந்தனர்.
பா.ஜ.,வுக்கு 30 பேர், ம.ஜ.த.,வுக்கு 7 பேர் இருந்தனர். தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் பலம் 39 ஆக உயர்ந்துள்ளது. பா.ஜ.,வின் பலம் 29 ஆக குறைந்துள்ளது. ம.ஜ.த.,வின் பலம் ஆறாக குறைந்து உள்ளது.
எத்னாலுக்கு எதிர்ப்பு சட்டசபையில் காங்கிரசுக்கு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருந்தாலும், மேல்சபையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லை. தற்போதைய தேர்தலால் காங்கிரஸ் பெரும்பான்மையை பெற்று உள்ளது. இதனால் மசோதாக்கள் எளிதில் நிறைவேற்றப்படும்.
பா .ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட பசனகவுடா பாட்டீல் எத்னால், பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபினுக்கு எழுதிய கடிதத்தில், 'பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக தான் நான் ஓட்டு போட உள்ளேன். யாருக்கு ஓட்டு போட உள்ளேன் என்று நான் கூறாவிட்டால், காங்கிரசுக்கு தான் ஓட்டு போட்டேன் என்று முத்திரை குத்தி விடுவர்' என குறிப்பிட்டு இருந்தார்.
இது பற்றி காங்கிரஸ் தலைவர்களுக்கு தெரியவந்தது. நேற்று காலை எத்னால் ஓட்டுப்பதிவு செய்ய வந்த போது, அவரை ஓட்டு போட விட கூடாது என்று, காங்கிரசின் முன்னாள் எம்.பி., உக்ரப்பா, தேர்தல் அதிகாரி விசாலாட்சியிடம் கோரினார். இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், எத்னால் ஓட்டு போட்டார்.
'மாஸ்க்' பரமேஸ்வர் கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வீட்டிலேயே அவரை மருத்துவ குழு கண்காணித்தனர். அவர் ஓட்டு போட வருவாரா என்று கேள்வி எழுந்தது. ஆனாலும் அவர் விதான் சவுதாவுக்கு வந்த ஓட்டு போட்டார். முகத்தில் மாஸ்க் அணிந்திருந்த அவர், சோர்வாக காணப்பட்டார்.
ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்யும் போது, எம்.எல்.ஏ.,க்கள் யாருக்கு ஓட்டு போடுகின்றனர் என்பதை, ஓட்டுச்சாவடி முகவரிடம் கூற வேண்டும். ஆனால் எம்.எல்.சி., தேர்தலில் அப்படி இல்லை; ரகசிய ஓட்டுப்பதிவு நடப்பதால் யார், யாருக்கு ஓட்டு போட்டனர் என்பது பற்றி தெரியாது.
குறுக்கு ஓட்டு ஆனாலும் கணக்கீடுகள் அடிப்படையில் யார், யார் குறுக்கு ஓட்டு போட்டனர் என்பதை, தலைவர்கள் கண்டுபிடித்து விடுவர். அது உடனடியாக முடியாது என்றாலும், ஓரிரு நாட்களில் தெரியவரும். தேர்தல் முடிவுகள் குறித்து பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, கட்சி மேலிடத்திற்கு தகவல் கொடுத்து விட்டார்.
இதுபோல தேர்தல் அதிகாரி விசாலாட்சியும், தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கொடுத்தார்.
