/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குண்டு பாய்ந்து காங்கிரஸ் தொண்டர் மரணம்; எம்.எல்.ஏ., பரத் ரெட்டி மீது முதல்வர் கோபம்
/
குண்டு பாய்ந்து காங்கிரஸ் தொண்டர் மரணம்; எம்.எல்.ஏ., பரத் ரெட்டி மீது முதல்வர் கோபம்
குண்டு பாய்ந்து காங்கிரஸ் தொண்டர் மரணம்; எம்.எல்.ஏ., பரத் ரெட்டி மீது முதல்வர் கோபம்
குண்டு பாய்ந்து காங்கிரஸ் தொண்டர் மரணம்; எம்.எல்.ஏ., பரத் ரெட்டி மீது முதல்வர் கோபம்
ADDED : ஜன 03, 2026 06:05 AM

பல்லாரி: பல்லாரியில் நடந்த கலவரத்தால், காங்கிரஸ் தொண்டர் இறந்ததால், தன் கட்சி எம்.எல்.ஏ., பரத் ரெட்டி மீது, முதல்வர் சித்தராமையா கடும் கோபத்தில் உள்ளார்.
பல்லாரி டவுனில் இன்று வால்மீகி சிலை நிறுவப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி வீட்டின் முன், பேனர் வைத்ததால் நேற்று முன்தினம் இரவு, காங்கிரஸ், பா.ஜ., தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், காங்., தொண்டர் ராஜசேகர் ரெட்டி, 28, என்பவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தார்.
விளக்கம் இச்சம்பவம் தொடர்பாக, பல்லாரி மாவட்ட பொறுப்பு அமைச்சரான ஜமீர் அகமது கான், முதல்வரிடம் நடந்த சம்பவங்கள் பற்றி நேற்று காலை விளக்கம் அளித்தார். எம்.எல்.ஏ., பரத் ரெட்டியிடம் மொபைல் போனில் பேசினார்.
மொபைல் போனை முதல்வரிடம் கொடுக்க முயன்றார். ஆனால், பரத் ரெட்டியிடம் பேச, சித்தராமையா மறுத்து விட்டார்.
'ஜனார்த்தன ரெட்டி வீட்டின் முன்பு, பரத் ரெட்டி புகைப்படம் இருந்த பேனர் எதற்காக கட்டப்பட்டது. தேவையில்லாமல் பரத் ரெட்டி பிரச்னையை ஏற்படுத்தி உள்ளார். அநியாயமாக காங்கிரஸ் தொண்டர் இறந்து விட்டார்' என்று, ஜமீர் அகமது கானிடம், சித்தராமையா அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
பின், முன்னாள் அமைச்சர் நாகேந்திரா, கம்பளி எம்.எல்.ஏ., கணேஷிடம் மொபைல் போனில் பேசிய முதல்வர், 'பல்லாரியில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுங்கள்' என்றும் உத்தரவிட்டார்.
பின், அவர் கூறுகையில், ''பல்லாரி, காங்கிரஸ் தொண்டர் ராஜசேகர் ரெட்டி உயிரை பறித்த தோட்டா, எந்த துப்பாக்கியில் இருந்து வந்தது என்பதை கண்டறிய வேண்டும்,'' என்றார்.
சட்ட மசோதா இந்நிலையில், கலவரத்தில் காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா சந்தித்து ஆறுதல் கூறினார் .
பின், அவர் கூறுகையில், ''பெலகாவி குளிர்கால கூட்டத்தொடரில், வெறுப்பு பேச்சு தடை மசோதாவை கொண்டு வந்தனர். அந்த மசோதாவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், எம்.எல்.ஏ., பரத் ரெட்டி மீது முதலில் நடவடிக்கை எடுங்கள். ஜனார்த்தன ரெட்டி வீட்டை தகர்ப்பேன் என்று பிரச்னையை துாண்டிவிடும் வகையில் அவர் பேசி உள்ளார்,'' என்றார்.
* என்னை கொல்ல சதி
ஜனார்த்தன ரெட்டி கூறுகையில், ''என் வீட்டின் முன்பு நடந்த கலவரத்தின் போது, என்னை கொல்ல சதி நடந்தது. இதற்கு பரத் ரெட்டி, அவரது தந்தை சூரிய நாராயண ரெட்டி, சித்தப்பா பிரதாப் ரெட்டி ஆகியோர் தான் காரணம். என் வீட்டின் மீது, துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். பரத் ரெட்டி பழிவாங்கும் அரசியல் செய்கிறார். அடுத்த தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தில், வால்மீகி பெயரை வைத்து அரசியல் செய்கிறார். அவருக்கு பல்லாரி மக்கள் பாடம் புகட்டுவது உறுதி,'' என்றார்.
* பேய்க்கு சமம்
பரத் ரெட்டி கூறுகையில், ''நான் லண்டனில் படித்தவன். எனக்கு பழிவாங்கும் அரசியல் தெரியாது. வால்மீகி பெயரை வைத்து அரசியல் செய்யும், பா.ஜ.,வினர், வால்மீகி சமூகத்திற்கு எதுவும் செய்யவில்லை. நாங்கள் சிலையை திறக்க முன்வந்தது, அவர்களுக்கு பிடிக்கவில்லை. பிரச்னையை துாண்டி விடுகின்றனர். ஜனார்த்தன ரெட்டி பொய்யர். அவர் பேய்க்கு சமம். எத்தனை பேய்கள் கர்ஜித்தாலும், பல்லாரியை எதுவும் செய்ய முடியாது,'' என்றார்.
***
4 வழக்குகள் பதிவு
சட்டம் -- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஹிதேந்திரா கூறுகையில், ''பல்லாரி கலவரம் தொடர்பாக, தனித்தனி புகார்கள் அடிப்படையில் மூன்று வழக்குகளும், போலீசார் தாங்களாக முன்வந்து ஒரு வழக்கும் பதிவு செய்து உள்ளனர். அரசியல் தலைவர்களின் தனியார் பாதுகாவலர்கள் பயன்படுத்திய ஐந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
''ஜனார்த்தன ரெட்டியிடம் துப்பாக்கி இல்லை என்று, பல்லாரி போலீசார் தெரிவித்து உள்ளனர். இறந்தவர் உடலில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டாவையும், பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளையும் வைத்து, எந்த துப்பாக்கியில் இருந்து தோட்டா பாய்ந்தது என்று கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.
***

