ADDED : ஜூலை 16, 2025 08:14 AM
பெங்களூரு : ஒப்பந்ததாரர்களுக்கு பாக்கித்தொகையில் முதல் கட்டமாக 600 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என, பி.பி.எம்.பி., ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவை சந்தித்து, பி.பி.எம்.பி., ஒப்பந்தாரர்கள் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.
மனுவில், 'கடந்த 23 மாதங்களாக ஒப்பந்தாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை, மாநகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும்' என கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
மாநகராட்சியின் மானியத்துடன் டெண்டர் பணிகளை முறையாக முடித்த பல ஒப்பந்ததாரர்களுக்கு, 2023 ஆகஸ்ட் முதல் இதுவரை பில் தொகை வழங்கப்படவில்லை.
கடந்த 23 மாதங்களாக செலுத்தப்படாத பில் தொகை 2,150 கோடி ரூபாய். குறைந்தபட்சம் 600 கோடி ரூபாயாவது உடனடியாக வழங்க வேண்டும். அப்போது தான் ஒப்பந்தாரர்களால் நிதி நெருக்கடியிலிருந்து தப்பிக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் உறுதியளித்தார்.
