கொப்பால் மேம்பாட்டு ஆணையத்தில் ரூ.8.43 கோடி ஊழல் கண்டுபிடிப்பு
கொப்பால் மேம்பாட்டு ஆணையத்தில் ரூ.8.43 கோடி ஊழல் கண்டுபிடிப்பு
ADDED : ஆக 16, 2026 11:06 PM

கொப்பால்: கொப்பால் நகர மேம்பாட்டு ஆணையத்தில், 8.43 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து, விசாரணைக்கு உத்தரவிடும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
கொப்பால் நகர மேம்பாட்டு ஆணையத்தில், சமீபத்தில் அதிகாரிகள் கணக்கு தணிக்கை செய்தனர். அப்போது ஆணையத்தில் 8.43 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த போது, வீட்டு மனை கொடுப்பதாக பொது மக்களை நம்ப வைத்து, மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இந்த முறைகேட்டின் சூத்திரதாரி ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் ரவீந்திரா என்பதை, அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இவரை, பணிநீக்கம் செய்துள்ளனர்.
தணிக்கை அறிக்கையின் தகவல் அடிப்படையில், கொப்பால் நகர் போலீஸ் நிலையத்தில், கொப்பால் நகர மேம்பாட்டு கமிஷனர் சரணப்பா புகார் அளித்துள்ளார்.
இது குறித்து, கொப்பால் மாவட்ட கலெக்டர் சுரேஷ் ஹிட்னால் கூறியதாவது:
கொப்பாலின் கிம்ஸ் பின்பகுதியில் உள்ள, சரோஜா லே - அவுட்டில், வீட்டு மனை கொடுப்பதாக நம்ப வைத்துள்ளனர். ஆணையத்தின் பெயரில் சட்ட விரோதமாக வங்கி கணக்கு துவக்கியுள்ளனர்.
இந்த கணக்கில் பொதுமக்களை பணம் செலுத்த செய்துள்ளனர். அதன்பின், இந்த பணத்தை தங்கள் கணக்கில் பரிமாற்றம் செய்து கொண்டனர். இவ்வாறு, 8.43 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.
இது வெறும் ஒரு நபர் மட்டுமே செய்துள்ள முறைகேடு அல்ல. கொப்பால் நகர மேம்பாட்டு ஆணையத்தின் உள்ளே இருப்பவர், வெளியே இருப்பவர், வங்கி ஊழியர்களுக்கும், இந்த முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என கருதுகிறோம்.
ஒப்பந்த ஊழியர் ரவீந்திரா பணி நீக்கம் செய்யப்பட்ட பிறகும், பண பரிமாற்றம் நடந்துள்ளது. ஆணையத்தின் சில அதிகாரிகளின் கையெழுத்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்தி, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
