ADDED : செப் 01, 2026 03:19 AM
ராம்நகர்: கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட இடத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். ஐந்து பேரை கைது செய்தனர்.
ராம்நகர் நகரின் சாந்திலால் லே - அவுட்டில் உள்ள கட்டுமான கட்டடம் ஒன்றில், கள்ள நோட்டுகள் அச்சிடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து ஐஜூர் போலீசார், நேற்று காலையில் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அங்கு கள்ள நோட்டுகள் அச்சிடுவதை கண்டுபிடித்தனர். ஐந்து பேரை கைது செய்தனர்.
அந்த கட்டடம், சந்தோஷ் என்பவருக்கு சொந்தமானது. யாரும் வசிக்காத, கட்டுமான நிலையில் இருந்த கட்டடத்தில் கள்ள நோட்டுகள் அச்சிட்டால், யாருக்கும் சந்தேகம் வராது என்பதால், அந்நபர்கள் அந்த இடத்தை கள்ள நோட்டுகள் தயாரிக்க பயன்படுத்தி வந்தனர்.
வெளி மாநிலங்களில் இருந்து, காகித ஷீட்டுகளை வரவழைத்து, அதில் குறிப்பிட்ட ரசாயனத்தை பூசி, பொது மக்கள் எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி, அசல் நோட்டுகளை போல், இயந்திரம் மூலமாக அச்சிட்டுள்ளனர். ஷீட்டுகளில் 200 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு, அதை வெட்டி எடுத்து பண்டல்களாக பேக்கிங் செய்துள்ளனர். இவற்றை வெளியே கொண்டு சென்று, புழக்கத்தில் விடவும் தயாரானது, விசாரணையில் தெரிந்தது.
போலீசார், தடயவியல் நிபுணர்கள் அந்த இடத்தை ஆய்வு செய்தனர். நோட்டுகளை அச்சிட பயன்படுத்திய காகிதங்கள், ரசாயனங்கள், அச்சடிப்பு இயந்திரங்கள் உட்பட பல பொருட்களை பறிமுதல் செய்தனர்.
