/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கூட்ட நெரிசலில் நகை திருடிய தம்பதி கைது
/
கூட்ட நெரிசலில் நகை திருடிய தம்பதி கைது
ADDED : ஜன 29, 2026 06:54 AM

கே.ஆர்.புரம்: கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பெண்களை குறிவைத்து நகைகளை திருடிய மைசூரு தம்பதி கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு கே.ஆர்.புரம் தேவசந்திராவில் வசிப்பவர் லட்சுமம்மா. இவர், கடந்த 3ம் தேதி வீட்டின் அருகில் உள்ள கோவிலில் நடந்த விழாவில் பங்கேற்றார்.
கூட்ட நெரிசலை பயன்படுத்திய மர்மநபர்கள், லட்சுமம்மா கழுத்தில் அணிந்திருந்த 30 கிராம் தங்க செயினை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரில், கே.ஆர்.புரம் போலீசார் விசாரித்தனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், எலக்ட்ரானிக் சிட்டி வட்டரபாளையாவில் வசிக்கும், மைசூரின் எச்.டி.கோட் டவுனை சேர்ந்த காயத்ரி, 33 என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் காயத்ரியும், அவரது கணவர் ஸ்ரீகாந்த், 42 சேர்ந்து, திருவிழாக்கள், பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பெண்களை குறிவைத்து தங்க நகைகளை திருடியது தெரிந்தது. ஸ்ரீகாந்த்தும் கைது செய்யப்பட்டார்.
திருடிய நகைகளை ஹெப்பகோடி, மைசூரில் உள்ள நகை கடைகளில் விற்றதை தம்பதி ஒப்பு கொண்டனர். நகை கடைகளில் விற்கப்பட்ட, 40 கிராம் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். இதன் மதிப்பு, 60 லட்சம் ரூபாய்.

