ADDED : டிச 09, 2025 06:39 AM
சீனிவாசப்பூர்: தம்பதி தற்கொலை செய்து கொண்டதால், பிறந்து ஏழு நாட்களே ஆன ஆண் குழந்தை அனாதையானது.
தங்கவயல், சீனிவாசப்பூர் தாலுகா உப்பாரபள்ளி என்ற இடத்தில் கோழிப்பண்ணை உள்ளது. இங்கு, 15 நாட்களுக்கு முன், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஹபூப் ரஹ்மான், 30, பரிதா 20 தம்பதி வேலைக்கு சேர்ந்தனர்.
பரிதாவுக்கு ஒரு வாரத்துக்கு முன் தான் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் தம்பதி, தாம் தங்கியிருந்த அறைக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இவர்கள் அருகில் துாங்கிய குழந்தை கண்விழித்து அழுது கொண்டே இருந்தது.
நேற்று முன்தினம் வீடு திறக்கவில்லை; குழந்தை ஓயாமல் அழுதவாறு இருந்ததால் அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வீட்டின் கதவு உள்பக்கம் தாழிட்டு இருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு கணவர், மனைவி இருவரும் இறந்த நிலையில் கிடந்தனர். குழந்தை ஆரோக்கியமாக இருப்பதை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்த்தனர்.
கணவர், மனைவி தற்கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
