நகைகளை திருடிய இருவர் கைது
பெங்களூரின் கோனனகுன்டேவில் வசிக்கும் குடும்பத்தினர், சில நாட்களுக்கு முன் வீட்டை பூட்டி, சாவியை ஜன்னலில் மறைத்து வைத்து விட்டு, பணிக்கு சென்றிருந்தனர். இதை நோட்டம் விட்ட மர்மநபர், சாவியை எடுத்து வீட்டுக்குள் சென்று 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிக்கொண்டு தப்பியோடினர். மாலையில் வீட்டினர் வந்த போது, திருட்டு நடந்ததை அறிந்து, போலீசாருக்கு புகார் அளித்தனர். விசாரணை நடத்திய போலீசார், இருவரை கைது செய்து, நகைகளை மீட்டனர்.
விபத்தில் பெண் இறப்பு
பெங்களூரின், அரேபின்னமங்களாவில் வசித்தவர் நேத்ரா, 30. இவர் நேற்று முன் தினம் இரவு, இவர் தன் கணவர் அனிலுடன், அரேபின்னமங்களா சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அங்கு சாக்கடை பணிகள் நடப்பதால், பைப்புகள் போடப்பட்டிருந்தன. இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர், உருண்டு விழுந்ததால் பின்னால் அமர்ந்திருந்த நேத்ரா, பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பலி
தாவணகெரே, ஜகளூரின், முஸ்டூர் - கடபனகட்டே கிராமங்களின் இடையே, நேற்று மதியம் வேகமாக சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. காரில் இருந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரகுநாத், 45, உயிரிழந்தார்.
விபச்சாரம்: மூவர் கைது
ராய்ச்சூர், சிந்தனுாரில் உள்ள வீடு ஒன்றில், விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு சென்று, சோதனை நடத்திய போலீசார், கங்காதர், சாமண்ணா, விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர். அபிஷேக் என்பவர் தப்பிவிட்டார். இங்கிருந்த ஒரு பெண்ணை மீட்டனர்.
விபத்தில் மூவர் உயிரிழப்பு
கலபுரகி, சேடம் தாலுகாவின், கொங்கனஹள்ளி கிராமம் அருகில் நேற்று மதியம் இரண்டு பைக்குகள் மற்றும் லாரி மோதலில் பைக்குகளில் பயணித்த சஞ்சீவ்குமார், 21, இவரது தம்பி காசிநாத், 19, மஹதேவ் தொட்டப்பஹள்ளி, 26, ஆகியோர் உயிரிழந்தனர்.

