கஞ்சா செடிகள் அழிப்பு
சீனிவாசப்பூரின் எல்டூர் கிராமத்தில், ஒரு வயலில் கஞ்சா செடி வளர்ப்பது தெரியவந்தது. சீனிவாசப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அங்கு வளர்த்திருந்த கஞ்சா செடிகளை அழித்தனர். விசாரித்ததில், அந்த நிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்த லட்சுமிக்கு சொந்தமானது என, தெரியவந்தது. அவர் மீதும், கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கஞ்சா விற்பனை
முல்பாகல் ஏ.பி.எம்.சி., அருகே உள்ள சமீர் மொஹல்லா என்ற இடத்தில் வசித்து வரும் அபோக்கர், 22. கஞ்சா விற்பனை செய்து வந்தார்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு, 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அபோக்கரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
விவசாயி தற்கொலை
முல்பாகலின் அரஹள்ளி கிராமத்தில், மகேஷ், 42, என்ற விவசாயி மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமான இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். தற்கொலைக்கு கடன் தொல்லையே காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பணி நீக்கம்
கோலார் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில், மனிதர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யும் நிலையத்தில், சட்ட விரோதமாக விலங்குகளின் ரத்தத்தை பரிசோதனை செய்த மருத்துவ ஊழியர் ராகவேந்திராவை, மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவி பணி நீக்கம் செய்தார்.
விபத்தில் ஒருவர் பலி
பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார், தங்கவயல் பேத்தமங்களா அருகே தொட்டக்காரி என்ற இடத்திற்கு சென்ற போது, இயந்திர கோளாறு ஏற்பட்டு சாலையின் தடுப்பில் மோதி பல்டி அடித்தது. இதில், சென்னையை சேர்ந்த தேவானந்த், 24. சம்பவ இடத்திலேயே பலியானார். சர்வேஸ், 26, என்பவருக்கு தலையில் பலத்த காயமும், மேலும் இருவருக்கு சிறு சிறு காயங்களும் ஏற்பட்டன. தகவல் அறிந்த பேத்தமங்களா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, காயம் அடைந்தவர்களை மருத்துவ மனையில் சேர்த்தனர். வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
4 வாகனங்களுக்கு தீ
முல்பாகலின் நுாகுலுபண்டே ரஹ்மத் நகரை சேர்ந்தவர் அஸ்லாம் பாஷா. இவரது வீட்டின் முன், நான்கு இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு தலை மறைவாகினர். வீட்டில் இருந்தவர்களுக்கு வாகனங்கள் எரிந்த விபரம் தெரிய வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனாலும், வாகனங்கள் முழுமையாக எரிந்து நாசமாயின.

