சக மாணவிக்கு 'பிரெட்டி' என 'மெசேஜ்': மாணவர் மீதான கிரிமினல் வழக்கு ரத்து
சக மாணவிக்கு 'பிரெட்டி' என 'மெசேஜ்': மாணவர் மீதான கிரிமினல் வழக்கு ரத்து
ADDED : ஜூலை 22, 2026 11:29 PM
பெங்களூரு: சக மாணவிக்கு இன்ஸ்டாகிராமில், 'பிரெட்டி' என, 'மெசேஜ்' அனுப்பிய இளைஞர் மீது பதிவான கிரிமினல் வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
பெங்களூரின் கல்லுாரி ஒன்றில், 20 வயது இளைஞர் படிக்கிறார். தன்னுடன் படிக்கும் மாணவியுடன் நட்பாக பழகினார்.
ஒரு முறை மாணவிக்கு இன்ஸ்டாகிராமில், 'பிரெட்டி' (நீ அழகாக இருக்கிறாய்) என்ற, 'மெசேஜ்' அனுப்பினார். இதற்கு நன்றி கூறி, மாணவியும் பதில் மெசேஜ் அனுப்பியிருந்தார்.
ஆனால், மாணவர் தனக்கு அனுப்பிய மெசேஜை, ஐ.பி.எஸ்., அதிகாரியான தன் தந்தையிடம் மாணவி காட்டினார்.
இதை கண்டு கோபமடைந்த தந்தை, கல்லுாரி மாணவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் மாணவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்தனர். இதை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மாணவர் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு நீதிபதி நாக பிரசன்னா முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.
மாணவி தரப்பில் ஆஜரான வக்கீல், 'மாணவிக்கு பிரெட்டி என மெசேஜ் அனுப்பியதன் மூலம், பெண்ணின் கவுரவத்துக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார்' என வாதிட்டார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், 'மாணவரான இளைஞர் திறமையான கிரிக்கெட் வீரர். வரும் நாட்களில் தமிழக அணியில் சேர வேண்டும் என, கனவு காண்கிறார்.
'இந்த கிரிமினல் வழக்கால், அவரது விளையாட்டு எதிர்காலத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, விசாரணையின் போது, போலீசார் மாணவரின் லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். அவர்கள் சட்ட விதிகளை பின்பற்றாமல் நடவடிக்கை எடுத்துள்ளனர்' என வாதிட்டார்.
நீதிபதி நாகபிரசன்னா, ''இந்த வழக்கில் பெண்ணின் கவுரவத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் எந்த அம்சங்களும் தென்படவில்லை. பெண்ணை பின்தொடர்வது போன்ற செயல்களும் நடக்கவில்லை. இது சக மாணவர் - மாணவி இடையே நடந்த தனிப்பட்ட உரையாடல்.
'' பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட தகவல் அல்ல. இன்றைய இளம் தலைமுறையினர் பயன்படுத்தும் இதுபோன்ற வார்த்தையை குற்றம் என கருத முடியாது.
''இந்த வ ழக்கை தொடர அனுமதித்தால், சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக ஆகும்,'' எனக் கூறி, மாணவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
