/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பண்டிப்பூர் வனப்பகுதியில் இரவு நேரம் போக்குவரத்துக்கு அனுமதியளிக்க நெருக்கடி
/
பண்டிப்பூர் வனப்பகுதியில் இரவு நேரம் போக்குவரத்துக்கு அனுமதியளிக்க நெருக்கடி
பண்டிப்பூர் வனப்பகுதியில் இரவு நேரம் போக்குவரத்துக்கு அனுமதியளிக்க நெருக்கடி
பண்டிப்பூர் வனப்பகுதியில் இரவு நேரம் போக்குவரத்துக்கு அனுமதியளிக்க நெருக்கடி
ADDED : மார் 29, 2025 06:58 AM
பெங்களூரு: பண்டிப்பூர் வனப்பகுதியில், இரவு நேரத்தில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கும்படி, கர்நாடக அரசுக்கு, கேரளாவின் வயநாடு காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முதல்வர் சித்தராமையா தர்மசங்கடத்தில் சிக்கியுள்ளார்.
சாம்ராஜ்நகரின், பண்டிப்பூர் புலிகள் சரணாலய பகுதியாகும். இங்கு புலிகள், சிறுத்தைகள், யானைகள், மான், காட்டு எருமை, காட்டுப்பன்றி உட்பட, பலவிதமான விலங்குகள், பறவைகள் உள்ளன.
இரவு நேரத்தில் வாகனங்கள் செல்வதால், விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சாலைகளை கடந்து செல்லும்போது, வாகனங்கள் மோதி விலங்குகள் உயிரிழந்த சம்பவங்களும் நேர்ந்தன.
இதை கருத்தில் கொண்டு, பண்டிப்பூர் வனப்பகுதியின் தேசிய நெடுஞ்சாலை - 766ல் இரவு நேர போக்குவரத்துக்கு, கர்நாடக அரசு பல ஆண்டுகளுக்கு முன்பே தடை விதித்தது. இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கர்நாடகா - கேரளா இடையே, வர்த்தக வாகனங்கள் இயங்குகின்றன. இரவு நேரத்தில் போக்குவரத்துக்கு தடை விதித்ததால், வர்த்தக வாகனங்களால் இயங்க முடியவில்லை. எனவே தடையை தளர்த்தும்படி, கேரள அரசு வலியுறுத்துகிறது.
எந்த காரணத்தை முன்னிட்டும், பண்டிப்பூர் வனப்பகுதியில் இரவு நேர போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வன விலங்கு வல்லுநர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
எனவே கர்நாடக அரசு இரவு நேர போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்பதில் உறுதியாக உள்ளது.
இந்நிலையில் கேரளாவின், வயநாடு காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா, போக்குவரத்து தடையுத்தரவை தளர்த்தும்படி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா, பிரசாரம் செய்யும்போது பண்டிப்பூர் வனப்பகுதியில் உள்ள, இரவு நேர போக்குவரத்து தடையுத்தரவை நீக்க வைப்பதாக உறுதி அளித்தார்.
அதன்படி கர்நாடக அரசுக்கு நெருக்கடி கொடுத்து, தடையுத்தரவை தளர்த்த முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதனால் முதல்வர் சித்தராமையா, தர்ம சங்கடத்தில் சிக்கி உள்ளார்.